Sunday, April 2, 2017

ஐடி ஊழியர்களைச் சுற்றி பின்னப்படும் குற்ற வலை

"ஐடி இஞ்சினியர்கள் சுத்தமா பொறுமை இல்லாதவனுங்க.
அவனுங்களுக்கு  மனசு கம்யூட்டர் போல வேலை செய்யுது,
வாழ்க்கையே  இண்டெர்நெட் வேகத்துல அவனுங்களுக்கு
தேவைப்படுது" என  ஐடி பெறியாளரகள் குறித்து அடுக்கடுக்காக பல குற்றச்சாட்டுகளை எடுத்து வைத்திருக்கிறார் பெங்களூரின்
உயர் போலீஸ் அதிகாரி ஒருவர்.

இந்தத் தகவல்  "புளூம்பர்க் பிசினஸ் வீக்" (Bloomberg Businessweek) ல்
இந்தியப் பத்திரிக்கைகளில்  ஐடி பெறியாளர்களின் குற்றங்கள் திட்டமிட்டு  பூதாகரமாக்கபடுவது  தொடர்பான ஒரு கட்டுரையில்
வந்திருக்கிறது.

"இளம் பெண் பெறியாளர் கொலை" ,  "ஐடி ஊழியர் ஒருவர் ஓடும் வேனில் பலாத்காரம்",  "ஐடி துறையில் வேலை செய்த கள்ளக்காதலி"  போன்ற தலைப்புச்செய்திகளை நீங்களும் பார்த்திருக்க வாய்ப்புள்ளது.

இப்படி பெரும்பான்மையான குற்றங்களுக்கு ஐடி துறையை வலுக்கட்டாயமாக இழுப்பதன் உள்நோக்கம் என்ன ? இப்படி ஐடி என்றோ பொறியாளர் என்றோ தனித்துக் குறிப்பிட்டு எழுத
வேண்டியதன் அவசியம் என்ன ? அப்படி எழுதும் உள்ளார்ந்த மனநிலைக்கு என்ன  காரணம் ? என்பதை இந்தக் கட்டுரை அலசுகிறது.

கட்டுரைப் படி, தமிழ்நாடு, கர்நாடகம் உள்ளிட்ட  எல்லா இந்திய மாநிலங்களில் வெகுஜன மக்களைத் தாண்டி போலீசுக்கும் ஜடி துறைபற்றி நல்லதொரு அபிப்ராயம் சுத்தமாக இல்லையாம்.

(அவர்களின் பார்வையில்)  பெரும்பான்மையான நேரங்களைக் கணினியுடன் செலவிடும்  ஐடி மக்கள் தங்கள் நிஜ
வாழ்க்கையையும் அதே கண்ணோட்டத்தோடு பார்க்கிறார்கள் என்கிறார்கள்.  துரதிஷ்டவசமாக அவர்களின் விருப்பப்படி
வாழ்க்கை அமையாத பட்சத்தில் கொலைகூடச் செய்யத் தயங்குவதில்லையாம். மேற்கத்திய நாட்டுக் கம்பெனிகளுக்கு வேலைசெய்யும் இவர்கள் அதே சுதந்திர மனநிலையுடன் தனிப்பட்ட வாழ்வை அணுகுவதால் விவகாரத்து போன்ற பல பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்களாம்.

சமயங்களில்  அவர்களுக்கு அலுவலகத்தில் இருக்கும் அதிகப்படியான மனஅழுத்தம் கூட இதுபோன்ற குற்றங்களைச் செய்யத் தூண்டுவதாக ஒரு பொதுவான கருத்து மக்களிடம்
பரவலாக இருப்பதாகச் சொல்கிறார்கள்.

குறைந்த வயதில் கைநிறைய சம்பளம், சொந்த வீடு, கார் என வாங்கிப் பொருளாதாரத்தில் வேகவேகமாக முன்னேரும்  ஐடி துறையினரை வெளியிலிருக்கும் சாமானியர்கள் ஒருவித பொறாமையோடே பார்கிறார்கள். அதன் வெளிப்பாடே மேலேச் சொன்ன பத்திரிக்கைத் தலைப்புச் செய்திகள் என்கிறது இந்தக் கட்டுரை.

இப்படிச் சாமானியர்களுக்கு  ஐடி மக்கள் மீது இருக்கும் ஒருவிதக் காழ்ப்புணர்ச்சியே ஊடகங்களில் ஐடி துறைகுறித்த தவறான சித்திரம் என அந்தக் கட்டுரை முடிகிறது.

இதில் எந்த அளவுக்கு உண்மையிருக்கிறது எனத் தெரியவில்லை.
ஆனால்,  என்னைப் பொறுத்தவரை ஐடி மக்களை யாரும் தேவதைகள் எனப் புகழவும் வேண்டும். சாத்தான்கள் என விரட்டவும் வேண்டாம். மாறாக  அவர்களையும் சகமனிதனாக நினைத்தாலே போதும்.

1 comment: