Wednesday, December 27, 2017

அறம்- எழுத்தாளர் ஜெயமோகன்

புதிதாக என்னை(எனது எழுத்தை) வாசிக்கத் தொடங்குபவர்கள் தனது "அறம்" தொகுப்பில் இருந்துத் தொடங்கலாம் என எழுத்தாளர் ஜெயமோகன்
ஒருமுறை சொன்னதாக நினைவு.

அந்தத் தொகுப்பை சில வருடங்களுக்கு முன்பு வாசித்திருந்தாலும், அதில்
குறிப்பாக  3 கதைகள் மட்டும்  மீண்டும் மீண்டும் வாசிக்கத்தூண்டுபவை. அவருடைய மொழியில் சொல்வதென்றால் தீராத மனஎழுச்சி கொள்ளச் செய்பவை. அந்த 3 கதைகள் "சோற்றுக் கணக்கு", "யானை டாக்டர்", "நூறு நாற்காலிகள்". ஆச்சர்யப்படத் தக்கவகையில் அந்த மூன்றும் தொகுப்பில் 4,5,6 என வரிசையாக இடம்பிடித்திருக்கிறன.

என்னைப் பொறுத்தவரை, அந்தத் தொகுப்பின் ஆகச்சிறந்த கதை சந்தேகமின்றி 'சோற்றுக் கணக்கு'. அப்படிச் சொல்ல அந்தக் கதையில் வரும் கெத்தேல் சாகிபு போலோருவர் எனது கல்லூரி நாட்களில் இருந்ததுகூட காரணமாக இருக்கலாம்.

அறத்தின் எல்லா சிறுகதைகளும் அவருடைய தளத்தில் இலவசமாகவும் கிடைக்கிறது. வாய்ப்பு கிடைத்தால் வாசியுங்கள்.

அறம், ஜெயமோகன், வம்சி பதிப்பகம்

Saturday, December 2, 2017

தொழில் பிரச்சனை-2

(முதல் நிகழ்வை வாசிக்காதவர்கள், என்னுடைய முந்தைய பதிவை வாசித்துவிட்டு வரவும் )

நிகழ்வு#2 ;

முதல் உணவக உரிமையாளர் கைவிட்டபின் விருந்துக்குக் கையில் இருந்த 4
நாட்களில், அவசரம் அவசரமாக இரண்டாவது உணவகத்தை நண்பர்கள் மூலம் தேடிப்பிடித்தேன்.  அவர் புதிதாக தொழில் தொடங்கியிருந்தார். தரம் பராவாயில்லை ரகம்.  ஆனால், அவர் ஆரம்பம் முதலே விலை விசயத்தில் தெளிவில்லை. எது கேட்டாலும் குழப்பமான பதில் வந்தது.
இவ்வளவுக்கும் நான் அவரை நேரில் பார்த்து பேசினேன்.
மெனு குறித்து ஏதேனும் போனில் பேசினால்,  'ஃசெப்பிடம் கேட்கவேண்டுமே' என்பார். அந்தப் பதிலுக்கும் நான் அவருக்கு  திரும்ப போன் செய்ய வேண்டும். சமயங்களில் போனை கூட எடுக்க மாட்டார். பின் சில மணி நேரங்கள் கழித்து மெசேஜ் செய்வார். எனக்கும் வேறு வழியில்லாததால் நான் பொறுத்துக் கொண்டேன். ஒருவழியாக  மெனு, டாலரை ($) உறுதிசெய்தோம்.

அந்த சுபநாளும் வந்தது. அவரிடம் விருந்திற்கு 30 நிமிடத்திற்கு முன்பு வந்துவிடுங்கள் என நேரம் சொல்லியிருந்தேன். அதனால், அவருக்கு நினைவூட்டலாக முதல் முறை 2 மணி நேரத்திற்கு முன்பு போன் செய்தேன். '
மறக்கவில்லை, சரியான நேரத்திற்கு வரும்' என்றார். பின் திரும்ப இரண்டாம் முறை நினைவூட்டலும் செய்தேன் (30 நிமிடத்திற்கு முன்). ' இதோ கிளம்புகிறோம்'  என்றவர் கிரடிக்ட் கார்டையெல்லாம் வாங்கிக் கொண்டார்.

அவருக்கு சொன்ன நேரம் வந்தது. ஆனால், ஆளைக் காணோம். போன் செய்தேன். அவர் எனது எந்த அழைப்பையும் தொடர்ச்சியாக எடுக்கவில்லை.   பொறுப்பை எடுத்துக்கொண்ட எனக்கோ அதிர்ச்சி.
வேறு வழியில்லாமல் நண்பர்களுடன் சேர்ந்து  உணவகத்துக்கு போன் செய்து பார்த்தோம். வாடிக்கையாளரை எதிர்கொண்டு பழக்கமில்லாத ஒரு பெண்.  அவர் வேறு யாரையோ கூப்பிட்டார். அவரிடம்
பிரச்சனையைச் சொன்னோம்.  கடைசியாக இதோ, அதோ எனச் சொல்லி அவர்கள் அனுப்பி வைத்த ஆள் 1;30 மணிநேரத் தாமதமாக வந்துசேர்ந்தார்.

அதிஷ்டவசமாக அது ஸ்னாக்ஸ் பார்ட்டி, மட்டுமில்லாமல்  நாங்கள் கூடுதலாக அமெரிக்க உணவையும் ஆர்டர் செய்திருந்ததால் தப்பித்தோம்.
ஆனால், இந்திய உணவை எதிர்பார்த்து வந்த சிலர் ஏமாற்றத்தோடு திரும்பிவிட்டனர்.  கொஞ்சபேர் அந்த ஆள் வரும் வரை  காத்திருந்தார்கள். அதனால் நிறைய உணவு மீந்துவிட்டது.

'ஏன் லேட் ?, நான் லேட்டாக வந்த உணவுக்கு பணம் தரமுடியாது
என மறுத்தேன். '  வந்தவர், உரிமையாளர் உங்களுக்கு போனில் விளக்குவார்  என்றார்.   1;30 மணிநேர தாமதமாக விருந்துக்கு உணவு எடுத்து வந்தவரிடம் இரண்டு வாய்ப்புகள் கொடுத்திருந்தேன். பேசியபடி பணத்தை கொடுக்க முடியாது, அதற்கு பதிலாக முடிந்தால் இலவசமாக கொடுங்கள் இல்லை 50% வாங்கிக் கொள்ளுங்கள் என்றேன்.

அதற்கு  அவர்கள் இதை  இலவசமாக தருகிறோம். ஆனால், அடுத்த
விருந்து ஆர்டரை எங்களுக்கு கொடுத்து இன்னோரு வாய்ப்பு தாருங்கள் என்றார்கள்.  எங்களுக்கு இன்னோரு முறை அவர்களுக்கு வாய்ப்பு
தர விருப்பமில்லாததால்,  அடுத்த நாள் 50 % பணத்தைக் கொடுத்து கணக்கை சரிசெய்தோம்.

இவ்வளவுக்கு பிறகும், என்னைச் சலனப்படுத்தி எனக்குத்  தீராத மன உளைச்சலைத் தந்த அந்த உரிமையாளர் இன்றுவரை எனக்கு  ஃபோன் செய்யவில்லை.  பதிலாக அவர் எனக்கு ஒரு மெசேஜ் அனுப்பி இருந்தார்.
// My sincere apology, I know this shouldn't have happen. I was suppose to come with the food. That was the plan.. // இப்படி வந்த அந்தச் செய்திக்கு ஒற்றை வார்த்தை பதில் அனுப்பினேன். "நன்றி".  அதைத் தவிர நான் அவருக்கு என்னதான் சொல்லுவேன். சொல்லுங்கள் நண்பர்களே.

Tuesday, November 28, 2017

தொழில் பிரச்சனை-1

வியாபரத்தில் எதிர்பாராத பிரச்சனைகள் வருவது தவிர்க்க இயலாது.  ஆனால், அந்தப் பிரச்சனைகளை எப்படி எதிர்கொண்டு சமாளிக்கிறார்கள்
என்பதே  வியாபாரத்தில் ஒருவரின்  வெற்றி, தோல்வி என்பதைத் தீர்மானிக்கிறது.  இது தொடர்பான எனது சமீபத்திய அனுபவம் இங்கே.

ஒரு பெரிய அலுவலக விருந்துக்கு  இந்திய உணவுவகைகளை ஆர்டர் செய்வது தொடர்பாக இங்கிருக்கும் இரண்டு இந்திய உணவக உரிமையாளர்களிடம் நேரடியான தொடர்பில் இருந்தேன்.    அவர்கள் இருவரும் இந்தியாவின்  ஒரே மாநிலத்தைத் சேர்ந்தவர்கள். துரதிஷ்டவசமாக சொல்லி வைத்தார்போல் இருவருக்கும் ஒரு இக்கட்டானச் சூழல் ஏற்ப்பட்டது. அதை இருவரும் கையாண்ட விதம் நேர் எதிரானது. அந்த இரண்டு நிகழ்வுகள் உங்களுக்காக.

நிகழ்வு#1 ;
முதலாமவரை நான் நேரில் அவருடைய உணவகத்தில் சந்தித்து ஆர்டர் தொடர்பாக பேசினேன்.  ஆரம்பம் முதலே அவருடைய பேரத்திலும், பேச்சிலும் கரார் தன்மை இருந்தது. தனது சரக்கு தரத்தால் உயர்ந்தது அதனால் விலை சற்று அதிகம்தான் எனவாதிட்டுப் பேசினார். அவருடைய அனுகுமுறையில் வெளிப்படைத் தன்மையும் இருந்தது. தலைக்கு இத்தனை 
டாலர் ($) எனத் தெளிவாக சொல்லிவிட்டார்.  அந்த உணவகத்தின் தரம் எனக்குத் தெரியும் என்பதால் அதிக பேரமின்றி ஒரு குறிப்பிட்டத் தொகையைப் பேசி இறுதிசெய்தேன். 

விருந்துக்கு 4 நாட்களுக்கு முன் ஒரு ஞாயிற்றுக் கிழமை மாலை அந்த உணவகத்தில் இருந்து போன் வருகிறது. என்னால் அந்தப் போனை எடுக்கமுடியவில்லை. நான் திரும்ப இரவில் அந்த உணவக எண்ணுக்கு 
அழைத்தபோது நேரடியாக வாய்ஸ் மெசேஜிக்குச் சென்றது.  அந்த வாய்ஸ் மெசேஜ் செய்தி எனக்கு உண்மையில் ஒரு அதிர்ச்சி தான்.

அந்த வாய்ஸ் மெசேஜ் அதிர்ச்சி செய்தி- "உணவகத்தின் சமயலறையில் எதிர்பாராமல் ஏற்பட்ட தீவிபத்தால் பராமரிப்பிற்காக உணவகம் வரும் 3 வாரங்களுக்கு மூடப்பட்டிருக்கும்" என்பதுதான்.

நான் வேறு வழியில்லாமல் வேறு நபர்களைத் தேட வேண்டியக் கட்டாயத்தில் இருந்தேன். அடுத்த நாள் திங்கள் கிழமை காலை அலுவலக எண்ணிற்கு
அந்த உரிமையாளர் அழைத்திருந்தார். தீவிபத்து விசயத்தை நேரடியாக சொன்னவர். மன்னிப்பு கேட்டுக்கொண்டார். 'உங்களுக்கு விருப்பமிருந்தால்
வேறு ஆளை ஏற்பாடு செய்ய இயலும்' என்றார். அவர் சொன்ன உணவகத்திற்கு நல்ல பெயர் இல்லாததால், நான் மறுத்தேன். அவர் மறுபடியும்  'ஐ ம் எக்ஸ்டீமிலி சாரி. மை அப்பாலஜிஸ்' என மனதார பேசினார். அடுத்த முறை தேவைப்படும் போது கண்டிப்பாக தொடர்புகொள்ளச் சொன்னார். சுபம்.

நிகழ்வு#2 ஐ நாளை பதிவிடுவேன்.

Wednesday, November 15, 2017

எழுத்தாளர் ஸ்டெல்லா புரூஸ்

எழுத்தாளர் ஸ்டெல்லா புரூஸ் குறித்து சமீபத்தில் எழுத்தாளர் நண்பர் கார்த்திக் புகழேந்தி ஒரு முகநூல் பதிவு எழுதி அவரைப் பற்றிய நினைவுகளைக் கிளரிவிட்டிருந்தார்.

ஸ்டெல்லா புரூஸ் எனக்கு 90களில் வெகுஜன இதழில்களின் வழியாக அறிமுகமானவர். அவருடைய பெயரில் இருக்கும் வசிகரத்தால்தான் நான் முதலில் ஈர்க்கப்பட்டேன் எனச் சொன்னால்
சரியாக இருக்கும் என நினைக்கிறேன்.
( இயற்பெயர்- ராம் மோகன்).

நெஞ்சதைத் தொடும் பல சிறுகதைகள், புதினங்கள்(நாவல்கள்) எழுதி
புகழ் அடைந்த அந்த எழுத்தாளர் தனது 67வது வயதில் (2008) தனது மனைவி இறந்தச் சோகத்தால் தற்கொலை செய்து கொண்டார் என்பதை மட்டும் ஏனோ மனம் நம்ப மறுக்கிறது. ஆனாலும், பல  மனிதமனங்களின் உள்ளடுக்களில் சஞ்சாரிக்கும் ஒரு எழுத்தாளனின் வாழ்க்கையில் இத்தகைய விநோதங்கள் சாத்தியமே எனும் குரலும் என்னுள் கேட்கத்தான் செய்கிறது.

அவர் தன் கடைசிகாலத்தில் வறுமையில் வாடிக்கொண்டிருந்தார் எனும்
செய்தி மேலும் துயரமளிப்பதாக இருக்கிறது.

அவருடைய "25 வருடக் கதை" எனும் சிறுகதையை முடிந்தால் வாசித்துப்பாருங்கள்.  அது வசதிவாய்ப்பிற்காக, தன் கொள்கைகளை விட்டு ஒரு பணக்கார வீட்டில் பெண் எடுத்து திருமணம் செய்து கொள்ளும் ஒரு டாக்டரின் கதை. நல்ல கதையம்சம். செறிவான எழுத்து.

நன்றி- படங்கள் இணையம்.


Wednesday, November 1, 2017

ஹார்வர்டு தமிழ் இருக்கை

ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு தமிழக அரசு சமீபத்தில் ரூ 10 கோடி
நிதி வழங்கியிருப்பதன் மூலம் இந்தச் செய்தி தமிழகம் முழுமையும்
சென்று சேர்ந்திருக்கிறது. அது தொடர்பான சில தகவல்கள்.

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழைக் கற்கவும், ஆய்வுகளை
மேற்கொள்ளவும் வசதி செய்து தரும் முயற்சி இது.  இதற்கு தலா 500,000  அமெரிக்க டாலர்கள் நிதி வழங்கி தொடங்கிவைத்த ஜானகிராமனும்,  திருஞானசம்பந்தமும் அமெரிக்க வாழ் மருத்துவர்கள்.   மருத்துவர்
ஜானகிராமன் திருவாரூர் பகுதியைச் சேர்ந்தவர் என்பதில் காவிரி மைந்தர்கள் அனைவரும்  பெருமை கொள்ளலாம்.

மருத்துவர் ஜானகிராமன் அவர்களை  2016- அமெரிக்காவின் நீயுஜெர்சி பெட்னா பேரவைக் கூட்டத்தில் சந்திக்கும் வாய்ப்புகிடைத்தது.  ( படத்தில், வலதுபுறம் மருத்துவர் ஜானகிராமன், இடதுபுறம்  திரு. பாலசந்திரன் இ.ஆ.ப எனது பங்களா கொட்டா புதினத்தை பெற்றுக் கொண்டபோது )  மருத்துவருடன் அவருடைய மனைவி, மகனுடன் (அவரும் ஒரு மருத்துவர்) தனிப்பட்ட முறையில் உரையாடும் ஒரு நல்ல வாய்ப்பும் அன்று கிடைத்தது.

அன்றைய விழாவில்   இருக்கையை அறிமுகம் செய்து உரையாற்றிய  மருத்துவர் ஜானகிராமன் இந்த எண்ணம் உருவான ஒரு சுவையான சம்பவத்தைக் குறிப்பிட்டார்.

அமேரிக்காவின் ஹவாய்த் தீவில் வசித்துவரும் வைதேகி ஹெர்பர்ட் பதினெட்டுச் சங்க நூல்களையும் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்தவர்.
அவரைப் பாராட்ட எடுக்கப்பட்ட விழாவொன்றில் உதயமானது தான்
தமிழுக்கான நிரந்தர இருக்கை என்றார்.

ஜானகிராமன்,  'என் வாழ்நாளில் தமிழுக்கு ஏதாவது பெரிதாகச் செய்யவேண்டும் என நினைக்கிறேன். உங்கள் ஆலோசனை என்ன?’ என
அம்மையாரிடம் கேட்டிருக்கிறார்.   வைதேகி அவர்கள்
அந்தக் கணம் மனதில் தோன்றியதைச் சொல்லியிருக்கிறார்... 'உலகப் புகழ்பெற்ற ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்கு இருக்கை கிடையாது. தொன்மையான தமிழ் மொழிக்கு ஓர் இருக்கை அங்கே அமையுமானால், உலகமே பயனுறும். தமிழுக்குப் பெருமை; தமிழர்களுக்கும் பெருமை’ எனச் சொன்னாதாக  நினைவு கூர்ந்தார். (இன்னொரு செய்தி- வைதேகி அம்மையாரிடம் தொலைபேசி வழியாக வாரமொரு முறை சங்கஇலக்கியம்  பயிலும் அமெரிக்க நண்பர்கள் குழுவில் அடியெனும்
இருக்கிறேன்)

ஹார்வர்டில் தமிழ் இருக்கை திட்டம்  அயல்நாட்டு தமிழர்களாலும் தமிழுக்கும், தமிழகத்திற்கும் தங்கள் பங்களிப்பைச் சிறப்பாக செய்ய முடியும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கும் என நினைக்கிறேன். இருக்கை குறித்தான  மேலும் விரிவான தகவல்களை அவர்களுடைய
(http://harvardtamilchair.org/) இணையதளத்தில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

அவர்களின் தளத்தில் உள்ள தகவல்களின்படி இருக்கை அமைக்கத் தேவையான 6 மில்லியன் டாலர்களில் 2.67 மில்லியன்கள் நிதி திரட்டியிருக்கிறார்களாம்.  இதைச் சமூக வலைத்தளங்களின் வழியாக முன்னெடுப்பதில் தீவிரக் களப்பணி ஆற்றும் நண்பர்கள்
பாராட்டுக்குரியவர்கள்.

தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்யச் சொன்ன பாரதியின் கனவு மெய்பட வேண்டும். அதற்கான சிறு முயற்சி இது.
முயற்சி வெற்றி பெற வாழ்த்துவோம்.

Friday, October 20, 2017

Love, Loss and What We Ate - நடிகை பத்மா லட்சுமி

பெரிய பின்புலம் எதுவும் இல்லாமல் புலம்பெயர்ந்த நாடுகளில் 
தங்களின் சொந்தத் திறமையால் நிறம், இனம்,மதம் போன்ற தடைக்கற்களை உடைத்து விருட்சமாக உயர்ந்து நிற்பது பெரும் சவாலான விசயம். அதைக் தினம் தினம் கண்கூடாக பார்த்துக்கொண்டும் இருக்கிறேன்.

அந்த வகையில், சென்னையில் ஒரு மத்தியதர வர்கத்தில் பிறந்து,
தந்தையைப் பிரிந்தச் சிறுமியாகத் தன் தாயோடு அமெரிக்காவில் குடியேறி வெற்றிபெற்ற "டாப் செஃப்" புகழ் பத்மா லட்சுமியின் வாழ்க்கை முக்கியத்துவம் பெறுகிறது.

பத்மா- முழுப்பெயர் "பத்மா பார்வதி லட்சுமி வைத்தியநாதன்" சுருக்கமாக "பத்மா லட்சுமி" (பிறப்பு-1970)  .  இவர் எழுத்தாளர், நடிகை, மாடல், டிவி தொகுப்பாளர், தயாரிப்பாளர்,தொழிலதிபர் என பலதளங்களில் இயங்குபவர்.

சமீபத்தில் நான் அவருடைய சுயசரிதையான "Love, Loss and What We Ate "ஐ வாசித்தேன் (ஓலி வடிவில்).

எழுத்தாளர் சல்மான் ருஸ்டியுனான காதலில் இருந்து நமக்குக் கதை சொல்லத் தொடங்கும் பத்மா 2016 ஆண்டு வரையான தனது வாழ்க்கையை  " Love, Loss and What We Ate  " எனும் மூன்று அம்சங்களில் சுவையுடன் பகிர்ந்திருக்கிறார்.

முதலில் சல்மானிலிருந்து தொடங்கினாலும், தனது சிறுவயது இந்திய பால்ய நினைவுகள், பள்ளி, கல்லூரி வாழ்க்கை,மாடலிங், சமையல்,  திருமணம், விவகாரத்து என  முன்னும் பின்னுமாகத்  தனது நினைவுகளை நகர்த்தி நாம் ரசிக்கும்படி பகிர்ந்திருக்கிறார்.

தான் ஒரு பிரபலம் எனும்  மனத்தடையின்றித் தனது காதல், திருமணம், விவாகரத்து என்பதைக் கடந்து தனது
அந்தரங்கங்களையும் வெளிப்படையாக சொல்லியிருப்பதையும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும்.

மாடலிங் துறையில் நுழைந்த புதிதில் தனக்கு "கோட்" (Coat) என்பதற்கும் "ஐக்கெட்" (Jacket)  என்பதற்குமான வித்தியாசம் கூட தெரிந்திருக்கவில்லை  என்பதைப் பட்டவர்தமாக போட்டு
உடைத்திருப்பார்.

அதுபோல வாழ்வின் உச்சங்களை எட்டும்போதெல்லாம் தனது மத்தியதரவர்கச் சிரமங்களை நினைத்துப் பார்த்தேன் என்கிறார்.

தன்னை வெளிப்படையாக  ABCD (American-Born Confused Desi)  என அறிவித்துக் கொண்டாலும்,  இந்திய, அமெரிக்க வாழ்வியல் நம்பிக்கைகளுக்கு இடையேயான தனது நிலைபாட்டை பத்மா குழப்பமின்றித் தெளிவாக எடுத்துவைக்கிறார். அதே சமயத்தில் தனது குழந்தைக்கு மலையாள முறைப்படி  'அன்னபிரசன்னம்' எனும்  சோறு ஊட்டும் நிகழ்வுக்கு முன்பாக மாமிச சூப் தந்த நிகழ்வைக் குற்ற உணர்வோடு ஒப்புக்கொள்கிறார்.

அப்படியே போகிற போக்கில் மாடலிங்,   அதில் இருக்கும் நுண்அரசியல்,  பிரபலமாக இருப்பதன் சிரமங்கள்,  தனது ஐரோப்பியப் பயணஅனுபவங்கள்,  உலகசமையல் என பல விசயங்களைத் தொடுகிறார்.

நாய், பூனை போன்ற சில மிருகங்கள் பிரசவத்திற்குபின் அகோர பசியின் காரணமாக அவை ஈன்ற சில குட்டிகளை தானே தின்றுவிடும் எனக் கேள்விப்பட்டிருப்போம்.  ஆனால், பிரசவித்த பெண்கள்  Placenta எனும்  தங்களது நஞ்சுக்கொடியை உண்பதை
நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா ?

ஆமாம்,  மேற்கு உலகில், குழந்தைபிறந்த பின் தாய்மார்கள் ( உடல்நலம் பேண ) தங்களது நஞ்சுக்கொடி எனும் Placentaவை உண்ணும் விநோத வழக்கம் இருக்கிறதாம்.  அதை பத்மாவும் முயன்று பார்த்திருக்கிறார்.  சிறுவயதில் சைவ பின்புலத்தில் பிறந்து வளர்ந்த பத்மா இதைச் செய்திருப்பதை நாம் ஆச்சர்யத்தோடுதான் பார்க்கவேண்டியிருக்கிறது.

அதுபோல அவருடைய  வலதுகை தழும்பு தன் வாழ்க்கையில்
ஏற்படுத்தித் தந்த திருப்பம், தனது தாயின் கணவர்கள், தனக்கு வந்த
நிர்வாண புகைப்பட வாய்ப்பு எனப் பல ஆச்சர்யங்களைச் சொல்கிறார்.

ஆண் பெண் உறவு, கடவுள் நம்பிக்கை, கல்வி என பலதளங்களில் புலம்பெயர்ந்தவர்களின் மனச்சிக்கல்களை அழகாக படம்பிடித்திருக்கிறார்.

பத்மா சென்னையில் பிறந்து உலகபிரபலமானவர் என்ற மேலோட்டமான அறிமுகத்தோடு கேட்கத் தொடங்கிய எனக்கு இறுதியில் அவரைப் பற்றி வேறுவிதமான பிம்பம் கிடைத்தது எனக் கண்டிப்பாகச் சொல்லலாம்..

இந்தச் சுயசரிதையை அவருடைய பார்வையில்,அவருடைய சொந்தக் குரலில் ஒரு நெடுங்கதைப் போலக் கேட்க சுவாரசியமாக இருக்கிறது. குறிப்பாக  அவருடைய இளவயது சென்னை அனுபவங்களை சிலாகித்து உணர்வுபூர்வமாக மனநெகிழ்ச்சியோடு பகிர்ந்ததையும் ரசித்தேன்.

ஒரு நெருங்கிய நண்பியிடம் கதைகேட்கும் மனநிலையை
தரும் அதே நேரத்தில் விசயத்தைப் போரடிக்காமல் நகர்த்தும் உத்தியையும் தெரிந்து வைத்திருக்கிறார்.  வாய்ப்பிருந்தால்
இந்தப் புத்தகத்தை வாசியுங்கள் அல்லது கேளுங்கள்.

நூல் - "Love, Loss and What We Ate"
ISBN-13: 978-0062202611
ஆசிரியர்-  பத்மா லட்சுமி
இணையதளம் - https://www.amazon.com/Love-Loss-What-We-Ate/dp/0062202618
விலை - $ 9.50 (Paper back)


படங்கள் இணையம்  நன்றி -
http://wmeimgspeakers.com/speaker/padma-lakshmi
https://en.wikipedia.org/wiki/Padma_Lakshmi

Tuesday, October 10, 2017

சுமோக்கி மலை - பயண அனுபவங்கள்-2

' இந்த வருடம் கோடை விடுமுறைக்கு ஸ்மோக்கி மலை' என்றவுடனே கண்டிப்பாக டிரக்கிங் செய்வோம்  (மலை ஏறவேண்டும் )  என உடன்வந்திருந்த ஐந்து நண்பர்களையும் விடாப்பிடியாக இழுத்துக்கொண்டு போயிருந்தேன்.

மலையெல்லாம்  நம்மால ஏற முடியாது எனத் தயங்கியவர்களை,
 'வருசத்துல 365 நாள்ல, ஒரு நாளையாவது இயற்கையோட செலவு பண்ணுங்களேப்பா ' என்றெல்லாம் அறிவுரை செய்ய வேண்டியிருந்தது.  கூடவே, 'பாதி வழியில் முடியலனா ஒன்னும் பிரச்சனையில்லை. அப்படியே திரும்பிடலாம் ' என நம்பிக்கை தந்ததால் ஒத்துக்கொண்டார்கள்.

மலையில் இயற்கையாக வழிந்தோடிக்கொண்டிருக்கும் ஒர் அருவியை டிரக்கிங் செய்து பார்த்துவிட்டுத் திரும்புவது எங்கள் நோக்கமாக இருந்தது. நாங்கள் தேர்ந்தேடுத்திருந்த மலை தரைமட்டத்திலிருந்து சுமார் 4000 அடி உயரம். போகவர மொத்தமாக  6 மைல்கள். இப்படி அந்த  மலையைப் பற்றி தேவையான அளவு தகவல்களைத் திரட்டியிருந்ததால் நான் மனதளவில் தயாராகவே இருந்தேன். ஆனாலும், சமமான பகுதியில் நடப்பதைவிட மலைப்பகுதியில் நடப்பது சற்று கடினம் என்ற உண்மை எங்களுக்குத் தெரிந்தே இருந்தது.

ஒருவழியாக ஆளுக்கொரு  பிரட் சன்விட்ச், தண்ணீர் ,  எனர்ஜி டிரிங்க் பாட்டில்கள் சகிதமாக முதுகில் ஆளுக்கொரு பையுடன் களம் காணகிளம்பிவிட்டோம்.

போகும் வழியெங்கும் கரடுமுரடான ஒத்தையடிப் பாதை, இரண்டு பக்கமும் அடர்ந்தக் காட்டில் நெடிந்து வளர்ந்த காட்டு மரங்கள் என ஆரம்பத்தில் உற்சாகமாகதான் போய்கொண்டிருந்தது.

ஆனால், ஒரு மைல் முழுதாகக் கடக்கும் முன்னரே 'வேல் வேல்' என உற்சாகமாகக் கிளம்பியவர்கள் கொஞ்சம் சுணங்கினார்கள்.
காரணம்.  நாங்கள் கிளம்பிய நேரம் நல்ல மதியம், சூரியன்
வேறு மரங்களின் வழி ஊடுருவி எங்களை இம்சித்துக்
கொண்டிருந்தான். கூடவே ஏற்ற இறக்கங்களுடனான பாதை. சிலருக்கு உயரத்தால் காதுகள்வேறு அடைத்தது போலிருந்தது. 

ஆக்ஸிஜன் குறைந்ததால் (?!) லேசாக மூச்சிரைப்பு வேறு. தொடர்பு எல்லைக்கு வெளியே இருந்த செல்போன்களும்  தன் பங்குக்கு ஊமையாகியிருந்தன. இப்படித் தயங்கி நின்ற எங்களை ஒர் அமெரிக்க குடும்பம் வேகமாகக் கடந்து சென்றது. அதில் ஒர் இளம்பெண் பனிச்சறுக்குச் செல்லும் ஆயத்தத்துடன் இரண்டு குச்சிகளை வைத்திருந்தாள். நான் உடனே அவர்களைக் கைகாட்டி  ' அவங்க போறாங்க, ஒய்
நாட் வீ,  லெட்ஸ் பாலோ தேம் ...  ' என்றெல்லாம் உற்சாகப் படுத்தவேண்டியிருந்தது. கூடவே, மலை ஏறும்போது நாம் கவனிக்க வேண்டிய இன்னோரு நுட்பத்தையும் மக்களுக்குச்  சொன்னேன்.

அதாவது,  கற்களின் மேல் நடந்து செல்லும்போது கால்களை அகலமாக எட்டி   வைத்து அந்த இடத்தை வேகமாகக் கடக்க முயற்சி செய்ய வேண்டும். சுருக்கமாகச் சொல்வதென்றால் "குறைந்த விலை- நிறைந்த தரம்" எனும் திநகர் கடைகளின் விளம்பரம் போல," குறைந்த அடிகள்- அதிக தூரம்".  அதுபோல, தேவையான அளவு தண்ணீர் குடிப்பதும் முக்கியம் என்பதையும் சொன்னேன்.

அப்படியே பாதி தூரம் நடந்துவந்தவர்கள் இனி திரும்பி கீழேபோக வேண்டாம் என முடிவெடுத்து முன்னே
நடக்கத்தொடங்கினார்கள். ஏற முடியவில்லை எனில் பாதியில் திரும்பிவிடலாம் என அதுவரை மனத்துக்குள் நினைத்திருந்த நான் கூட வேறுவழியில்லாமல் அவர்களைத் தொடர வேண்டியதாயிற்று.

போகும் வழியில் ஒரிரு சிற்றோடைகளைக் கடந்து சென்றோம்.
ஆனால்,  வழியில் ஸ்மோக்கி மலையின் தனிச்சிறப்பான  "கிரிஸ்லீ கரடி"யை எதிர்பார்த்திருந்த நாங்கள் அங்கே ஒடிய ஒரு பாம்பை அலட்சியத்தோடுதான் கடந்துபோனோம்.

நடக்கையில் எதிரே வந்துகொண்டிருந்த ஒரிருவரிடம் மேலே அருவி இருப்பதை உறுதிபடுத்திக்கொண்டோம். மலையில் தவறான வழியில் நடப்பதைப்போலொரு முட்டாள்தனம் இருக்கமுடியுமா என்ன ?

பேச்சுவாக்கில் தமிழகக் காட்டுக்குள்  30 வருடங்கள் ராஜாங்கம் நடத்திய வீரப்பன் பற்றிய பேச்சு வந்தது. காட்டில்  எங்கேயோ ஒரு குருவி கத்துவதை வைத்து காட்டுக்குள் என்ன நடக்கிறது என்பதைக் கணித்துவிடும் அவனது அசாதரண திறமை. இரவு பகலெனப் பாராமல் போலீசுக்குப் பயந்து சரியாகத் தூங்க முடியாமல் ஜாகையை மாற்றிக்கொண்டு திரிந்தது. அவனது அரசியல் தொடர்புகள்,சந்தன மரம், யானை தந்தங்கள் எனப் பேசியபடியே வெகுதூரம் வந்துவிட்டதை  அங்கு அடித்த குளிர்காற்று காட்டிக்கொடுத்தது.

ஆமாம், அருவியை நெருங்க நெருங்கக் காற்றில்
சில்லெனும்  குளிர்ச்சியை உணர்ந்தோம், கூடவே தண்ணீர்
' ஹோ'வென விழும் சப்தம் எங்கள் களைப்பைப் போக்கியிருந்தது.

ஒருவழியாக அடர்த்தியான பசும் மரங்களுக்கு இடையே பெரும் பாறையிலிருந்து கொட்டிக் கொண்டிருந்த கிரோட்டோ அருவியை ( Grotto Falls) தரிசித்தோம்.  குதுக்காலத்தோடு வழிந்தோடிக் கொண்டிருந்த நீரை முகத்தில் அடித்துக் கொண்டோம். சில்லென்றிருந்தது. அதை
எதிர்பார்த்திருந்ததுபோல
அப்போது லேசாக மழை தூரத் தொடங்கியது.   'வாழ்க்கையில ஒருநாள் மழையில நனைஞ்சு பாக்கலாம்பா  ' எனும் குரல் கேட்டது.  வேறு வழி ?   அதன் குளுமையையும் சில நிமிடங்கள் சேர்த்து அனுபவித்தோம்.

மழை விட்டபின் அருவியோடு போட்டிபோட்டு நிழற்படங்களை எடுத்துபின் சான்விட்சைக் கலோரியாக மாற்றிவிட்டு இறங்கத் தொடங்கினோம்.

நினைத்தது போல மலைஏறும்போது இருந்த சிரமம் இறங்கும் போது
கண்டிப்பாக  இல்லை. ஆனால், அதிகக் கவனம் தேவைப்பட்டது. ஒற்றையடிப் பாதையிலிருந்த சறுக்கங்கள் ஆளை முன்னால் தள்ளும் வல்லமைக் கொண்டது. அங்குக் கிடைக்கும் மரக்கு
ச்சிகளை  ஊனுகுச்சியாகப் பயன்படுத்துவது உத்தமம்.

மலையிலிருந்து கீழே இறங்கியபோது மணிபார்த்தேன். சரியாக நான்கு மணிநேரமாகியிருந்தது.


உடல் உழைப்பைக் கோரும்
ஒரு சவாலை முறியடித்திருந்தோம்.  வரும் நாட்களில் நாங்களும் டிரக்கிங் செய்திருக்கிறோம். அதுவும் கடல்மட்டத்திலிருந்து ஏறக்குறைய 4000 அடி, 6 மைல்கள் என எங்களால்
பெருமைப்பட்டுக் கொள்ள முடியும்.

கீழே காரில் ஏறும் சமயத்தில், ' நமக்கு இன்னைக்கு ராத்திரி கைகால் வலி பின்னிடும். யாரும் ஒய்ஃப் கிட்ட சண்டை போட்டுறாதீங்கப்பா.   அவங்க தயவு நமக்கு வர்ர இரண்டு நாளைக்குத் தேவ.. ' என ஒரு குரல் கேட்டது.

அந்த அறிவார்த்தமான குரலுக்குச் சொந்தக்காரன் கண்டிப்பாக நானில்லை. ;)


சில படங்கள் இணையம். நன்றி - SmokyMountains.com

Friday, October 6, 2017

மா(ற்)றுவார்களா?

தமிழ்நாட்டில் இருந்து வந்த இரண்டாம் வகுப்பு தமிழ் புத்தகத்தை வைத்து
இங்கே பிள்ளைகளுக்கு தமிழ் சொல்லிக் கொடுக்கிறேன்.

பாடத்திட்டம் பற்றி பெரிதாக குறை எதுவும் இல்லை. பாடல்கள், கதைகள், ஏன் பயிற்சிகள் கொடுத்திருக்கிறார்கள்.  ஆனால், கண்களை உறுத்தும் ஒரு
விசயம் புத்தகத்தில் அவர்கள் பயன்படுத்தியிருக்கும் சில படங்கள். அவை
நம் சூழலுக்கு முற்றிலும் அன்னியமாக படுகிறது.

அந்தப்  புத்தகத்தின் முதல்பாடத்தையே எடுத்துக் கொள்வோமே.
"தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு" எனும் பாடலுக்கு கீழே ஒரு பசுவையும் கன்றையும் கொடுத்திருக்கிறார்கள். அந்தப் பசுவும் கன்றும் கண்டிப்பாக தமிழ்நாட்டு பசு இனம் அல்ல. அது திமில் இல்லாமல் வெளிநாட்டு வகையாரா போலிருக்கிறது. கொஞ்சம் உற்றுப்பார்த்தால் டெக்சாஸ் வகை பசுபோல பக்கவாட்டில் பெரிய கொம்புகளுடன் இருக்கிறது.

அதுபோல "மீனவர் மீன் பிடிக்கிறார்" எனச் சொல்லிவிட்டு ஒரு தாய்லாந்து
இல்லை சீன மீனவர் தலையில் தொப்பியுடன் இருக்கும் படத்தை பயன்படுத்தியிருக்கிறார்கள்.

இப்படி நமது சூழலுக்கு முற்றிலும் பொருந்தாத பலவிசயங்கள் புத்தகத்தில் இருக்கின்றன. ஒரிடத்தில் யானை எனச் சொல்லி ஆப்பிரிக்க யானை. குரங்கு எனச் சொல்லி பனிக்குரங்கைப் போட்டிருக்கிறார்கள். இவையெல்லாம் சின்னவிசயம் என என்னால் ஒதுக்கிவிட முடியவில்லை.

அதுபோல "குழந்தை சிரிக்கிறது" எனச் சொல்லி ஒரு சைனீஸ் குழந்தையின் படத்தை போடுவதை விட ஒரு அசட்டுத்தனம் இருக்க முடியுமா என்ன ?
சரி, அவை  பாடத்திட்டங்களுக்கு படம் தேர்வு செய்த ஒரு கோமாளி இணையத்தில் திருடிய படங்கள் என்றால் இதையெல்லாம் மேற்பார்வை செய்பவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் ?.

பிள்ளைகள் நேரடியாக அன்றாட வாழ்வில் நேரடியாக பார்க்கக்கூடிய,உணரக்கூடிய விசயங்களை கல்வியாளர்கள் பாடத்திட்டங்களின் வழியாக சரியாக கொண்டுசேர்க்கவேண்டாமா ? ஒரு படம் ஆயிரம் ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம் எனச் சொல்வார்களே. ஆரம்பக் கல்வி வாயிலாக குழந்தைகளுக்கு  நுட்பமான ஒரு விசயத்தை சொல்கிறோம் எனும் பிரக்ஞைகூட அவர்களுக்கு இல்லையா.
இல்லை, "நாய்" எனச் சொல்லி பிள்ளைகளுக்கு லேப்ரடார் (labrador) வகை நாய்களை வளர்க்கச் சொல்லி மறைமுகமாக ஊக்கப்படுத்துகிறார்களா ? புரியவில்லை.

இதற்கு வேறு சாயங்கள் பூசாமல் நேரடியாகவே கேட்கிறேன். லண்டனில்
படிக்கும் ஒரு குழந்தையின் பாடத்தில் "காய்" எனச் சொல்லி முருங்கைக் காயின் படத்தை போடுவார்களா ? இல்லை "விளையாட்டு" எனச்
சொல்லி கபடி ஆடும் படத்தைதான் போடுவார்களா என்ன ?  சம்பந்தப்பட்டவர்கள் யோசிப்பார்களா ?

*************
இது புதிய தலைமுறை கல்வி இதழில், "மா(ற்)றுவார்களா?" எனும் தலைப்பில் வெளியான கட்டுரை.

#அலட்சியம்

Sunday, October 1, 2017

இரக்கமில்லா இரவுப்பணி

கடந்த வாரம் வேலைக்காக தொடர்ச்சியாக 12 மணி நேரத்துக்கு மேல் இரவில் விழித்திருக்கவேண்டியதொரு சூழல். இரவு 8 மணியில் இருந்து காலை 8  மணி வரை அலுவலகத்தில் இருக்க வேண்டும்.

வெளியில் இருந்து பார்ப்பவர்கள் 24 மணி நேரத்தில்,  12 மணி நேரம் மட்டும் வேலை மிச்ச நேரமெல்லாம் ஓய்வு தானே ? இதிலென்ன பெரிய பிரச்சனை ? என எளிதாகக் கேட்டுவிடுவார்கள்.  ஆனால், உண்மையில் இரவு பணி ஒரு பெரிய இம்சை என்பது அனுபவத்தவர்களுக்கு நன்றாக தெரியும். 

இரவில் கொட்ட கொட்ட  ஆந்தைபோல்
கண் விழித்துவிட்டு பகலில்  வீட்டுக்கு வந்து படுக்கையறையில் 
தூக்கமில்லாமல் புரண்டுகொண்டிருப்பதைப்போல் கொடுமை வேறில்லை.
அப்படியே  அசதியில் கண்மூடினாலும்  மிஞ்சிப் போனால் இரண்டு அல்லது 3 மணி நேரம் தூங்குவது பெரிய விசயமாயிருக்கும்.

நாம் பிறந்ததிலிருந்து நம் உடலை இரவில் தூங்குவதற்கு பழக்கப்படுத்தியிருக்கிறோம்.  இதை ஆங்கிலத்தில் "பையாலஜிகல் கிளாக் (Biological clock)" என்கிறார்கள். அதை ஒரே வாரத்தில் டக்கெண பல்டி அடித்து மாற்றிக்கொள் என்றால் கேட்பதற்கு  அது ஒன்னும் துணை முதல்வர் இல்லையே.  

நமக்கு உடல் ஒரு பிரச்சனை என்றால் வெளியில் இருந்து வரும் பிரச்சனை ஒருபுறம். ஆமாம், இரவு வேலை முடிந்து வீட்டிற்கு வரும்  நமக்கு மட்டும்தான் அந்தப் பகலில் ஓய்வு தேவை.   மற்றவர்களுக்கு  சாதாரண பகல் தானே. அவர்கள் டிவி, அரட்டை எனக் கொண்டாடிக்கொண்டிருப்பார்கள். துரதிஷ்டவசமாக எனது வீடுபோல பிள்ளைகள் இருக்கும் வீடாக இருந்தால் வேறு வினையே தேவையில்லை. உலகத்தில் இருக்கும் விளையாட்டையெல்லாம் அப்போதுதான் உற்சாகமாக விளையாடி கடுப்பேற்றுவார்கள்.

அதனால் பெரும்பாலும் நமக்குக் கிடைப்பதெல்லாம் குட்டி தூக்கம்தான். இதற்கு நடுவில் மதிய உணவுக்கு வேறு எழுந்திரிக்கவேண்டும்.  அதற்கு பின்பு தூக்கமெல்லாம் வெறும் கனவுதான். அப்படியே அடித்துப் பிடித்து தூங்கினாலும் இரவில் நிம்மதியாக தூங்குவதைப் போலோரு உற்சாகத்தை கண்டிப்பாக பெற முடியாது. 

எனது குழுவில் மேத்(Matt) எனும் அமெரிக்கன் இருக்கிறான். பொடியன்.
இந்தவருடம் கல்லூரி முடித்தவனை  வேறு எப்படி சொல்வதெனத் தெரியவில்லை.  ஷிப்டிற்கு  கையில் பேஸ்ட், பிரஸ், சோப்பு சகிதமாக தயாராய் வந்துவிடுவான்.  ஆனால், ஷிப்டின் மூன்றாவது
நாளில் அவன் முகத்தை  நீங்கள் பார்த்திருக்க வேண்டுமே. முகமெல்லாம் எக்டரா லார்ஜாக வீங்கி பார்க்க சகிக்கவில்லை. பாவம். அடுத்த நாளே அவனை பகல் ஷிப்டில் வரச்சொல்லிவிட்டேன். 

எப்படியோ ஒரு வழியாக இரவெல்லாம் தாக்குபிடித்து  தூக்கத்தைக் கட்டுப்படுத்தி விட்டாலும் காலை 7 மணிக்கு கண் சொக்கும் பாருங்கள். அப்பப்பா..

என்ன தான் சொன்னாலும் இப்படி தொடர்ச்சியாக இரவில் தூங்காமல் விழித்திருப்பதைப் போலோரு துரோகத்தை நம்மால் உடலுக்கு செய்துவிடமுடியுமா எனத் தெரியவில்லை. அந்த அளவுக்கு அசதி. கூடவே கண்கள் சிவந்து,  பசியெல்லாம் மறத்துபோய், பூதகணம் போல் சுற்றிக்கொண்டிருப்பது உண்மையில் தண்டனை.

அதனால் இரவு பணி செய்யும் அத்தனைப் பணியாளர்களும் நமது
பாராட்டுக்கும், வாழ்த்துக்குரியவர்கள் என்று நினைக்கிறேன்.

எது எப்படியோ அலுவலக வேலை இந்தவாரம் முடிந்துவிட்டதால் , குழுவிற்கு இரவு பணியில் இருந்து விடுதலை அளிக்க முடிவெடுத்துவிட்டோம். அப்பாடா..

Monday, September 18, 2017

தமிழ்ப்பள்ளி - மைல்கல்

அமெரிக்கவாழ் பிள்ளைகளுக்கான வார இறுதி தமிழ்வகுப்பு எனும் 
பயணத்தில் நாங்கள்  ஒரு முக்கிய  மைல்கல்லைத் தொட்டிருக்கிறோம் என்பதை நண்பர்களிடம் பகிர்ந்துக் கொள்ள ஆசைப்படுகிறேன்.

ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமையன்று  6-7 பிள்ளைகளுக்கு
வீட்டில்  1 மணி நேரம் என முடிவு செய்து கடந்த 4 மாதங்களுக்கு முன் அகரத்திலிருந்து தொடங்கினோம். பின் மெய் எழுத்துகள் அதைத் தொடர்ந்து உயிர்மெய் எழுத்துகள் என முழுவதையும் அறிமுகம் செய்துவிட்டோம்.

அறிமுகம் என்பதைத் தாண்டி அவர்களால்  இனி எழுத்துகளை அடையாளம் கண்டு, வாசிக்க இயலும். சொன்னால் புரிந்துக் கொண்டு எழுதிக் காட்ட முடியும்.  கொஞ்சம் முயற்சி செய்து அவர்களால்  சிறிய வார்த்தைகளை வாசிக்கவும், பார்க்காமல் எழுதவும் இயலும்.

இதையே ஒரு வெற்றியாக நாம் கொண்டாட வேண்டியதில்லை. 
இது அவர்களுடைய நீண்ட தமிழ்ப் பயணத்தின் ஒரு தொடக்கம் என்பதை நான் நன்றாக அறிவேன்.  உண்மையில் Light At the end of the tunnel என ஆங்கிலத்தில் சொல்வதைப்  போலோரு உணர்வு. 
ஆரம்பத்தில் வாரத்துக்கு வெறும் ஒரு மணிநேரத்தில் தமிழ் சொல்லிக் கொடுத்துவிட முடியுமா ? என்பது சந்தேகமாகத்தான் இருந்தது. ஆனால், இப்போது கண்டிப்பாக நம்பிக்கை வந்திருக்கிறது. உள்பெட்டியிலும், இமெயிலிலும் தொடர்பு கொண்டு
உற்சாகமளித்த நண்பர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

என்னிடம் வரும்  பெற்றோர்களிடம் நான்  தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கும் ஒரு விசயம் பொறுமை.  இதுவரை தமிழே பேசாத ஒரிரு பிள்ளைகளை வீட்டில்  உடைந்த தமிழ் பேசத்தொடங்கியிருப்பதே நல்ல தொடக்கமாக பார்கிறேன். மொழியைப் பொறுத்தவரை அடிப்படை மிக முக்கியம். அதை சரியாக வென்றேடுத்தால் நாம்  இலக்கை எட்டிவிடலாம். 

இலக்கை எட்ட பல பாதகமான விசயங்களையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.   எங்களிடம் தமிழ் படிக்கும் அத்தனை குழந்தைகளும் அமெரிக்கப் பள்ளிகளில் ஆங்கிலத்தில் படிப்பவர்கள்.  அவர்களின் அன்றாட தமிழின் பயன்பாடு என்பது மிகக் குறைவு. ஒரு பையனின் வீட்டில் பெற்றோர்களே தமிழில் பேசுவதில்லை.  ஒருவனுடைய பெற்றோர்களுக்கு தமிழ் பேசத் தெரிகிறது. ஆனால், எழுதுவதில் சிரமம் இருக்கிறது. கேட்டால் மூன்றாவது மொழியாகதான்  எங்களுக்கு தமிழ் இருந்தது என்கிறார்கள்

'எம்பொண்ணு எப்படி பண்றா? இல்லை எப்படி படிக்கிறான் ? எனக் கேட்கும் பெற்றோர்களுக்கு நான் சொல்லும் இன்னோரு விசயம்
பயிற்சி.  முதலில் அவர்களிடம் தமிழில்  பேசுங்கள்.  ஆரம்பத்தில் 
ஆங்கிலத்தில் பதில் சொன்னாலும்,  அதைத் தொடர்ந்து செய்யுங்கள். சித்திரமும் கை பழக்கம் தானே?. அதுபோல ஆங்கில வார்த்தைகளை சொல்லி அதற்கு ஈடான தமிழ் வார்த்தையைக் கேளுங்கள். விளையாட்டு போக்காக தமிழ் கண்டிப்பாக போய் சேரும்.

இரண்டெழுத்து வார்த்தைகள், மூன்றெழுத்து என தொடர்ச்சியாக
வாசிக்க, எழுத பயிற்சி கொடுத்துகொண்டிருக்கிறேன்.  பிறகு சிறு சிறு வாக்கியங்கள் என்று பழக்க திட்டமிட்டிருக்கிறேன். 

இந்த பிள்ளைகள் தயக்கமின்றி தமிழில்  உரையாட எந்தவிதமான பயிற்சி சரியானதாக இருக்கும் ?  நண்பர்கள் பரிந்துரைகளை எதிர்பார்கிறேன். நன்றி!!

Wednesday, September 13, 2017

மெர்குரிப்பூக்கள் - பாலகுமாரன்

எழுத்தாளர் பாலகுமாரனின் மெர்குரிப்பூக்கள் நெடுங்கதை சுருக்கமாக - தொழிற்சாலை ஒன்றில் நடக்கும் ஒரு வேலைநிறுத்தப் போராட்டம் சாமானியர்களின் வாழ்வில் ஏற்படுத்தும் வேறு வேறு விதமான தாக்கங்களைச் சொல்லும் கதை.

வேலை நிறுத்தப் போராட்டத்தில் எதிர்பாராமல் மரணமடையும்
தொழிலாளி கணேசன், அவனுடைய மனைவி சாவித்திரி. அந்தக் கணேசனின் மரணத்துக்கு குற்றம்சாட்டப்பட்ட தொழில்சங்கத் தலைவன் கோபாலன். அந்தத்  தொழிற்சாலையின் முதலாளி ரங்கசாமி. அங்கே மற்றோரு தொழிலாளியாக சங்கரன் அவனுடைய கள்ளக்காதலியான சியாமளி என பின்னிப்பிணைந்த பல பாத்திரப் படைப்புகள் ரத்தமும் சதையுமாக .

இந்த  ஒவ்வோரு பாத்திரத்திற்கும்  நுணுக்கமான பின்புலத்தை நிறுவி அவர்களின் மனஓட்டத்தை மிகச் சரியாக பிரதிபலிப்பதில் மனிதர் பின்னுகிறார்.  தன் எழுத்தால் எல்லா பாத்திரங்களையும் நம் கண்முன் மனிதர்களாக நடமாட வைத்திருப்பதிலும் ஜெயித்திருக்கிறார் .

இந்தக் கதை எழுதப்பட்ட ஆண்டு மற்றும் அதில் சொல்லப்பட்ட அரசியல் சூழல்களைப் பார்க்கும் போது மத்தியில் இந்திரா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியும், தமிழ்நாட்டில் கம்யூனிசத் தத்துவங்கள் வலுபெற்றிருந்தன என்பது தெரிய வருகிறது.

இந்த நாவல் வெளி வந்த காலகட்டத்தில் கதையின் உள்ளடக்கத்திற்காகவும், அதில் சொல்லபட்ட சர்ச்சைக்குறிய விசயங்களுக்காகவும் பெரிதும் பேசப்பட்டிருக்கும் என நினைக்கிறேன்.

Friday, September 8, 2017

கற்க கசடற விற்க அதற்குத் தக -பாரதி தம்பி

மருத்துவக் கனவு நொறுங்கியதால் தற்கொலை செய்துகொண்ட
அனிதாவின் மரணம் நம்மை உலுக்கிக்கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில் இன்றைய தமிழக கல்விச் சூழல் பற்றிய
உண்மையான, முழுமையான புரிதல் எல்லோருக்கும்
கண்டிப்பாக அவசியமாகிறது.


அது குறித்தான களநிலவரத்தைத் தெரிந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் அனைவரும் கண்டிப்பாக வாசிக்கவேண்டிய நூல் ஊடகவியலாளர் பாரதி தம்பி எழுதிய  "கற்க கசடற விற்க அதற்குத் தக" (விகடன் வெளியீடு).

இன்றைய கல்விச் சூழல் குறித்து முழுமையாக எழுதப்பட்ட ஆகச்சிறந்த நூல்
இது எனத் தயங்காமல் கை காட்டமுடியும்.

ஏழ்மையைப் போராடி  வெல்ல கல்வி போன்றதொரு கூர்மையான ஆயுதம் வேறில்லை என உறுதியாக நம்பும் எனக்கு இந்த நூலை உயர்த்திப் பிடிப்பதில் எந்தவிதமான தயக்கமும் இல்லை.

அரசு, தனியார், பொதுமக்கள், ஆசிரியர்கள்  எனும்
பாகுபாடு இன்றி   சமரசம் எதுவும் செய்து கொள்ளாமல்
பொறுப்புணர்ச்சியுடன் பாரதி இதை எழுதியிருக்கிறார்

ஆங்கிலத்தில் 360 கோணம் எனச் சொல்லப்படும் முழுமையான
பார்வையில்  இன்றைய கல்விச் சூழல் பற்றி அக்குவேறு ஆணிவேராகப் பிரித்து மேய்திருக்கிறார். அபாரம்.  

நலிவடைந்து வரும் அரசுப் பள்ளிகளின் இன்றைய நிலை, 
இது குறித்து மத்திய,மாநில அரசுகளின் தொடர்ந்த கள்ள மெளனம். தமிழக மாணவர்களின் பின்புலம், ஆசிரியர்களின் மனநிலை, இன்றைய பாடத்திட்டம், தாய்மொழி வழிக்கல்வி, தனியார் மயம், அரசுத் துறையின் மெத்தனப்போக்கு ,அரசுப் பள்ளிகள் எதிர் கொள்ளும் சவால்கள் என எல்லா விசயங்களையும் குறுக்கு வெட்டாக அதே நேரத்தில் சுவாரசியமாக விசயத்தை எடுத்து வைக்கிறார்.

தமிழில் தகுந்த தரவுகளைச் சேகரித்து, களப்பணி செய்து ஆங்கிலத்தில் எழுதுவது போல் ஈடுபாட்டுடன் கட்டுரைகள் எழுதப்படுவதில்லை எனும் குற்றச்சாட்டை முன்வைப்பவர்கள் இந்த நூலை வாசித்துவிட்டு பேசலாம்.

மத்திய, மாநில ஏன் உலக அளவில் கல்வி குறித்தான பல
புள்ளிவிவரங்கள், தரவுகளை முன்னிறுத்தி கட்டுரைகளுக்கு வலு சேர்த்திருக்கிறார். எடுத்துக்காட்டாக,  சென்னை போன்ற மாநகரங்களின் இதயப்பகுதியில் இருக்கும் அரசுப் பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டுவருவதற்கும் அதன் பின்புலத்திலான தனியார் ரியல் எஸ்டேட் எனும் வியாபாரத்தை உடைத்திருக்கிறார்.

அதே சமயத்தில், மூலைக்கு மூலை தனியார் பள்ளிகள்  என கல்வி
வியாபராமான இன்றைய சூழலில் அரசுப் பொதுப்பள்ளிகள் மட்டுமே நம் கல்வி உரிமையின் அடையாளங்களாக நிற்கின்றன எனச் சொல்லும் ஆசிரியர் மிளிரும் அரசுப் பள்ளிகள் சிலவற்றையும்
அடையாளம் காட்டியிருக்கிறார்.

நமது இன்றைய உடனடித் தேவை-  கல்விக் கொள்கை, பாடத்திட்டம், தேர்வுமுறை, நிதி ஒதுக்கீடு போன்றவை குறித்த ஒரு திறந்த உரையாடல் என்பதை  பட்டவர்தனமாகச் சொல்லும் நூல்.
அதை நாம் செய்வோமா ? என்பதே நமக்கு முன்னால் உள்ள கேள்வி.

தமிழ்நாட்டில் பிறந்து, வளர்ந்து தமிழ்ச்சமூகத்தின் அடுத்தத்
தலைமுறை குறித்து கொஞ்சமெனும் அக்கறை உள்ளவர்கள் அனைவரும் கண்டிப்பாக வாசிக்கவேண்டிய நூல்.

நூல்-கற்க கசடற விற்க அதற்குத் தக
ஆசிரியர்- பாரதி தம்பி
வெளியீடு- விகடன்
வாங்க- http://discoverybookpalace.com/products.php?product=%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%21
விலை- 145
பக்கங்கள்-248

Friday, September 1, 2017

கேலிச் சித்திரங்கள்

நூலகத்தில் கண்ணில் பட்ட " Cartooning for Kids" எனும் புத்தகத்தை
சமீபத்தில் வீட்டுக்கு எடுத்து வந்தேன்.

கோடை விடுமுறையில்  இருந்த இரண்டு மகள்களுமே (5,10 வயது) ஆர்வமாக போட்டி போட்டு போதும் போதும் எனும் அளவுக்கு வரைந்துவிட்டார்கள் (படத்தில்).

எனக்கும் சின்ன வயதில்  இந்தக் கார்டூன்களின் எனும் கேலிச்சித்திரங்களின் மீது ஒரு
கிறுக்கு இருந்தது உண்மைதான். செய்தித் தாள்களில் வரும்
படங்களைப் பார்த்து சதா கிறுக்கிக் கொண்டிருப்பேன்.


கார்டூனிஸ்டுகளுக்கு மக்களிடம் பெரும் மதிப்பு இருந்த காலம் அது ( தமிழில் ஆனந்த விகடன்  மதன் பெரிதும் சிலாகிக்கப்பட்டது போல ). அப்போது ஆங்கில  ஹிந்துவின் காட்டூனிஸ்டுகளான சுரேந்ரா, கேசவ் போன்றோரின் பரம ரசிகன் நான். குறிப்பாக சுரேந்ரா. அப்போதெல்லாம் ஞாயிற்றுக் கிழமை மட்டும் வீட்டில்  ஹிந்து வாங்குவோம். வாங்கியவுடன் எனக்கு முதல் வேலை கார்டூன் கார்னர் பக்கத்தைத் திருப்புவதுதான்.

அரசியல் கார்டூன்களில் அவரை அடித்துக் கொள்ள ஆளே இல்லை என நினைத்துக் கொண்டிருந்தேன். உண்மையில்  அவர் படங்களின் மேல்  எனக்கு ஒரு தீராத காதல் இருந்தது. என்னைப் பொறுத்த வரை அவருடைய கார்டூன்கள் கூர்மையானவை. அதே சமயத்தில் அதில் எப்போதும்  மெலிதான ஒரு நகைச்சுவை இருந்துக் கொண்டேயிருக்கும் (சமீபத்தில் கண்ணில் பட்ட ஒரு கார்டூனை கமெட் பகுதியில் பார்க்கவும்).

பதின்மவயதில் அவருடைய கிறுக்கல் கையெழுத்தைப் பார்த்துதான் எனது கையெழுத்தை வடிவமைத்துக் கொண்டேன் எனச் சொன்னால் அது பொய் இல்லை. உண்மை. இதில் என்னுடையது பெரியக் கிறுக்கல், அவருடையது சின்னக் கிறுக்கல்.
அவ்வளவுதான். பெரிதாக வித்தியாசமில்லை.  கிறுக்கல் கையெழுத்தில் சின்னக் கிறுக்கல், பெரிய கிறுக்கல் என்றெல்லாம் இருக்கிறதா என்ன ? :)

அதெல்லாம் வேறு பொழுதுபோக்கு எதுவும் இல்லாமல்
நாளிதழ்களை வரிவரியாக ஒன்று விடாமல் வாசித்த நாட்கள். இன்று,  இணைய செய்திகள், வாட்ஸ் அப் அதில் வரும் வீடியோக்களும், மீம்சுகளும் பிரபலமாயிருக்கும் இந்த அவசரச் சூழலிலும் நிதானித்து கார்டூன்களை கலை நுணுக்கத்துடன் ரசித்து சிலாகிக்கும் ஒரு சிறிய கூட்டம் இன்றும் இருக்கிறதா என்ன?

Sunday, August 20, 2017

அமெரிக்காவில் முழு சூரிய கிரகணம் - 99 ஆண்டுகளுக்கு பிறகு

"The Great American Eclipse"  எனும் மிகபிரமாண்டமான முழு சூரிய கிரகணத்திற்கு அமெரிக்கா தயாராகிவிட்டது.

ஆமாம், நாளை 21 ஆகஸ்ட், 2017 வட அமெரிக்காவை குறுக்காக
இரண்டாக வெட்டியது போல   பசிபிக் கடலில் தொடங்கி , அட்லாண்டிக் கடல்வரை கிரகணம்  (12 மாநிலங்கள்) தொட்டுச் சொல்கிறது. இதுபோன்றதொரு நிகழ்வு
அமெரிக்காவில்  நடந்தது 99 வருடங்களுக்கு முன்பாம்.

இதனால்,  மேற்கே ஆர்கனில் தொடங்கி கிழக்கே தென் கரோலினா வரையிலான 12 மாநில மக்களுக்கு நேரடியாக முழுமையான
கிரகணத்தை பார்க்கும் வாய்ப்பு நாளை கிடைக்கிறது.

பூமிக்கும், சூரியனுக்கும் நடுவே சந்திரன் தோன்றி சூரியனை மறைப்பது "சூரியகிரகணம்" எனும் 7ம் வகுப்பு அறிவியல் பாடத்தை நீங்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை.

இந்தச் சூரிய கிரகணம்  சந்திர கிரகணம் போல்  அவ்வளவு சாது இல்லை.  கொஞ்சம் முரடானது. அதனால் மிகுந்த எச்சரிக்கை தேவையாம். ஆமாம், கிரகணத்தின் போது சூரியன் மறைந்து சில நிமிடங்கள் இருளாக இருக்கும். ஆனால் சில மணிநேரங்களுக்கு வழக்கத்தை விட சூரியன் மிகவும் பிரகாசமாக தெரியுமாம். அதனால், கிரகணத்தின் போது சூரியனை நேரடியாக வெறும் கண்களால் பார்க்க அனுமதி இல்லை. இதற்கான கறுப்பு கண்ணாடிகளை அணிந்துக் கொண்டு பார்ப்பது உத்தமம். அதை மீறி 'நாங்கல்லாம் யாரு ?' என  சட்டைக் காலரை உயர்த்திக் கொண்டு வெறும் கண்களால் பார்த்தால் இந்த அதிகப்படியான ஒளியால் கண்களை இழக்க நேரிடும். ஜாக்கிரதை!!.

உண்மையில் கிரகணத்தின் பாதையில் நேரடியாக 12 மாநிலங்கள்
மட்டும் இருந்தாலும் வடஅமெரிக்கா முழுமைக்கும்  இதன் பாதிப்பு இருக்கிறது.  அதனால் கடந்த பத்து நாட்களாகவே கிரகணம் பற்றியும் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஊடகங்கள், பள்ளிகள் மட்டுமல்லாமல் பொது இடங்களில் அறிவிப்பு செய்திருக்கிறார்கள்.

ஆனால், இதற்கான பிரத்தியோக கறுப்புக் கண்ணாடிகள் எங்களுக்குக் கிடைக்காததால் நாங்கள் வீட்டில் கைவைத்தியம் செய்வதுபோல் Pinhole Projector எனும் "  சிறுதுளை உருப்பெருக்கி"  யை செய்துவிட்டோம். கிரகணத்தைப் பார்க்க இதை விட்டால் பாதுகாப்பான வேறு வழியில்லை. இதைச் செய்வது அறிவியல் சோதனை போல பெரிய பிரமாதமில்லை
என்பதால் என் 10 வயது மகள்  யூடிப்பின் உதவியால் செய்துவிட்டாள் (படம்).


கிரகணம் முடிந்த பின்னால் குளிக்கவோ, இல்லை வீட்டைக் கழுவி விடவோ திட்டமில்லை. ஆனால், முடிந்தால் வீடியோ எடுக்கும் திட்டமிருக்கிறது. அது நடந்தால் பகிர்கிறேன்.


படங்கள் நன்றி
yahoo.com
https://www.nasa.gov/

Saturday, August 19, 2017

வனநாயகன் -வல்லமை இதழில்

எனது 'வனநாயகன்-மலேசிய நாட்கள்' புதினம் குறித்த இந்த அறிமுகக் கட்டுரை வல்லமை இணைய இதழில் வெளியாகி உள்ளது.

http://www.vallamai.com/?p=78833

நன்றி: Megala Ramamourty(வல்லமை ஆசிரியர்க்குழு)

**********************************

வல்லமை வாசகர்களுக்கு,

அன்பு வணக்கங்கள். "வனநாயகன்-மலேசிய நாட்கள்" எனும் எனது இரண்டாவது புதினம் (நாவல்) கிழக்கு பதிப்பகத்தால் கடந்த ஜனவரியில் வெளியிட்டப்பட்டது.

2017-சென்னை புத்தகத்திருவிழாவில் வெளியான நாள் முதல் வாசகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற வனநாயகனை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் மிக மகிழ்ச்சி.

வனநாயகன் குறித்து நான் எழுதுவதைவிட, "காங்கிரீட் வனத்தில் ஒரு யுத்தம்" எனும் தலைப்பில் நண்பரும் விமர்சகருமான  சுரேஷ் கண்ணன் எழுதிய விரிவான அறிமுகக் கட்டுரையின் ஒரு சிறுபகுதியை உங்களுடன் பகிர்ந்து கொள்வது சரியாக இருக்குமென நினைக்கிறேன்.

"
...
மலேசியாவில் இயங்கும் வங்கிகளில் ஒரு பெரிய வங்கி, நஷ்டமடைந்து கொண்டிருக்கும் இன்னொரு சிறிய வங்கியை தன்னுடன் இணைத்துக் கொள்கிறது. இரு வங்கிகளின் இணைப்பு தொடர்பான தகவல் நுட்பங்களை கையாளும் குழுவின் தலைமைப் பொறுப்பில் நியமிக்கப்பட்டிருப்பான் சுதா. அவனுக்கும் மேலே பல பெரிய தலைகள். பல மாதங்கள் நீடிக்கும் இந்த அசுரத் தனமான உழைப்பு நிறைவேறப்  போகும் இறுதி நாளில் சுதாவிற்கு ஒரு தொலைபேசி அழைப்பு. அந்த அழைப்புதான் அவனது பணி பறிபோக காரணமாக இருக்கிறது. ஆனால் அது அவனை வெளியேற்றுவதற்கான ஒரு தந்திரமான வழி மட்டுமே. சுதாங்கன் இப்படி பழிவாங்கப் படுவதற்கு பின்னால் தனிநபர்களின் அற்பக் காரணங்கள் முதல் நாட்டின் பொருளாதாரத்தையே சிதைக்கும் பெரிய காரணங்கள் வரை பல உள்ளன. அவைகளைத் தேடி நாயகன் அலைவதே 'வனநாயகன்' எனும் இந்தப் புதினம். 


புலம்பெயர் இலக்கியத்தின் வகைமையில் இணையும் இந்தப் புதினம் ஒருவகையில் பயண இலக்கியமாகவும் அமைந்திருக்கிறது. மலேசிய நாட்டைப் பற்றிய கலாசாரக்கூறுகளின் பல்வேறு நுண் விவரங்கள், சுற்றுச்சூழலில் ஏற்படுத்தப்படும் பாதிப்புகள், நிதி மோசடிகள், இன அரசியல், பிரஜைகளின் படிநிலை அந்தஸ்து, அந்தப் பிரதேசத்தின் முக்கியமான இடங்களைப் பற்றிய விவரணைகள், சட்டவிரோதக் காரியங்கள், குழுக்கள் போன்ற தகவல்களால் நிறைந்திருக்கின்றன. ஆனால் இவையெல்லாம் 'இதைப் பற்றி சொல்கிறேன் பார்' என்று புதினத்தில் இருந்து தனியாக துண்டித்து விலகித் தெரியாமல் அதன் போக்கிலேயே உறுத்தாமல் விவரிக்கப்பட்டிருப்பது நூலாசிரியரின் எழுத்து திறனிற்கு சான்று. சம்பவங்களின் காலம் தோராயமாக இரண்டாயிரம் ஆண்டில் நிகழ்வதால் அது தொடர்பான சம்பவங்கள், அடையாளங்கள் மிகப் பொருத்தமாக இணைக்கப்பட்டிருக்கின்றன. "

என்னைப் பொறுத்தவரை எழுதுவதைவிடவும், அது அச்சாகி நூலாக வெளியாவதை விடவும் எழுதியவனுக்கு மகிழ்வூட்டக் கூடிய ஒரு விசயம் அந்நூல் குறித்தான உரையாடல்கள் தான். அந்த வகையில் வனநாயகனை வாசித்து பதிவுகள், மின்னஞ்சல்கள் வழியாக தொடர்ந்து உற்சாகமளித்து வாழ்த்திக் கொண்டிருக்கும் அனைத்து வாசகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.


வனநாயகன் - மலேசியா நாட்கள்
ஆரூர் பாஸ்கர்,
கிழக்கு பதிப்பகம், 
பக்கங்கள் 304, விலை ரூ.275


"வனநாயகன்-மலேசிய நாட்கள்" - வாங்க

அமெசான் கிண்டில் வடிவில் வாங்க

************************************

Saturday, August 12, 2017

வடகொரிய அடாவடிகள் (The Girl with Seven Names, 2015) -நாவல்

அணு ஆயுத வல்லமையுடன் அமெரிக்காவுக்கும்,  தென் கொரியாவுக்கும் பலவருடங்களாக  பூச்சாண்டி காட்டிக் கொண்டிருக்கும் வட கொரியாவைப் பற்றி நமக்கெல்லாம்
அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

உண்மையில் தொலைத் தொடர்பு மிகுந்த, உலகமயமான  இந்த 21ம் நூற்றாண்டில் பெரிதான வெளி உலகத் தொடர்புகள்  எதுவும் இல்லாமல் தனித் தீவுபோல்  இன்னமும்   ஒரு நாடு இருக்கிறது என்றால் அது வடகொரியாவாகதான் இருக்கும்.

இந்த வடகொரியா கடந்த அரைநூற்றாண்டுகளுக்கு மேலாக கிம் வம்சத்தின் பிடியில் இருக்கிறது. அவர்கள் மக்களுக்கு பலகட்டுப்பாடுகளை விதித்திருக்கிறார்கள் என்பதுமட்டுமே
நமக்கு தெரிந்த ஒரு மேலோட்டமான தகவல். மற்றபடி
நம்மிடம் அதிக விவரங்கள் இல்லை.

ஆனால், வடகொரிய  கட்டுப்பாடுகளில் இருந்து தப்பித்த ஒரு இளம்பெண் (லீ ஹெயான் சீயோ) அங்கு நடக்கும் அடாவடிகளை சமீபத்தில் விரிவாக ஒரு புத்தகமாக எழுதி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

மேற்கு நாடுகளில் பெரும் வரவேற்ப்பைப் பெற்றிருக்கும் அந்தப் புத்தகத்தின் பெயர் The Girl with Seven Names: A North Korean Defector’s Story (Book by David John and Lee Hyeon-seo)

வடகொரியாவில் இருந்து தன் குடும்பத்தை பிரிந்து தன்னந்தனியாக  சீனாவுக்கு தப்பித்த அவர்
தன்னுடைய தலைமறைவு வாழ்க்கையை விறுவிறுப்பாக பகிர்ந்திருக்கிறார்.

முதலில் வடகொரியாவில் இருந்து வெளியேறி  சீனாவில் இருக்கும் தனது உறவினர் வீட்டில் முதலில் தஞ்சமடைந்து பின்,  அவர்கள் ஏற்பாடு செய்தத் திருமணம் பிடிக்காமல் அங்கிருந்து தப்பித்து ஒரு விபச்சார விடுதியில் மாட்டிக் கொள்கிறார். அங்கிருந்து  ஒரு வழியாக தப்பித்து ஒரு ஹோட்டலில் வேலைக்கு சேருகிறார். ஆனால் அங்கேயும்  சரியான டாக்குமெண்டுகள் இல்லாமல் தலைமறைவாக வாழவேண்டிய கட்டாயம்.


கூடவே விடாத போலீஸ் துரத்தல்கள் . கள்ள பாஸ்போர்ட். அதற்கு உதவும் ஏஜண்டுகள். இதற்கு நடுவில் மெல்லிய காதல் என ஒரு திரைப்படத்துக்கு குறைவில்லாத சுவாரசியம்.

கதையின் ஊடாக  கிழக்கு ஆசிய மக்களின் ஆழ்ந்த நம்பிக்கைகள்
அவர்களுடைய பழக்க வழக்கங்கள், கொரிய வரலாறு போன்ற விசயங்களை போகிற போக்கில் சொல்லிச் செல்கிறார். அலுக்கவில்லை.

அதுபோல, தனது சிறுவயது வடகொரியாவைப் பற்றிச் சொல்லும் போது  ஒட்டு மொத்த நாடே ஒரு திறந்தவெளி சிறைச்சாலை போல பல கட்டுப்பாடுகளுடன் இருந்தது என நினைவுகூறுகிறார். அதுகுறித்து அவர் சொல்லும் பல விசயங்கள் நமக்கு ஆச்சர்யமூட்டுகின்றன.

சில ஆச்சர்யங்கள் உங்களுக்காக-

ஊடகங்கள், நீதிமன்றம் போன்ற ஜனநாயகத்தின் நான்கு தூண்களும் அரசாங்கத்தின் கையில்.

அயல்நாட்டு கலை வடிவங்களான திரைப்படம், டிவி, பாடல்கள் போன்ற எந்த விசயத்திற்கும் அங்கே  அனுமதி இல்லை.

மீறி அதை  யாரேனும் பார்த்து ரசிப்பது தெரியவந்தால் சிறை தண்டனை

பெண்கள் சிறப்பு சிகை அலங்காரங்கள் செய்துகொள்ளக் கூடாது.
பகட்டான உடைகள், வாசனைத் திரவியங்களுக்கு அனுமதியில்லை.

நாட்டின் முக்கியத் தலைவரை அடைமொழியில்
மட்டும் குறிப்பிடவேண்டும். தவறுதலாகக் கூட அவருடைய
பெயரை யாரும்  உச்சரிக்கக் கூடாது.

அதுபோல அவருடைய பெயரை தங்கள் வாரிசுகளுக்கு சூட்டவும்
பொதுமக்களுக்கு அனுமதியில்லை.

அரசாங்கத்துக்கு  எதிராக செயல்படுவதாக சந்தேகிக்கப்படுபவர்கள் அல்லது குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு
பொது இடத்தில் மரணதண்டனை வழங்கப்படும்.

பொது இடத்தில்  வழங்கப்படும் அந்தத் தண்டனையை அனைவரும்
பார்க்கவேண்டும் (பள்ளி மாணவர்கள் உட்பட) என்பது கட்டாயம்.

அரசாங்கம் அனுமதிக்காத வெளிநாட்டு பொருட்களை வைத்திருக்க, பயன்படுத்த யாருக்கும் அனுமதி இல்லை

கம்யூனிச நாடு என்பதால் உணவு, உடை, வாழ்விடம் என சகலத்திலும் அரசாசங்கத்தின் கட்டுப்பாடுகள் இருக்கின்றன.

ஆனால்,  அரசாங்கத்தின் கடைநிலை ஊழியர்கள் மட்டத்தில் ஊழல் மிக சாதாரணம்.  அதனால், அரசுக்கு நெருங்கியவர்களும், பணம் படைத்தவர்களுக்கும் சட்டம் வளைகிறது.

பத்தாண்டுகளுக்கு மேலாக சீனாவில் வாழ்ந்த லீ ஹெயான்
இறுதியில் தென் கொரியாவில் அடைக்கலம் பெறுகிறார். இதற்கிடையில் வடகொரியாவில் இருக்கும் தன் குடும்பத்தினரை கள்ள ஏஜண்டுகள் மூலம் தப்பிக்க வைக்கிறார்.

இப்படி பல சவால்களுக்கு பின் இறுதியில் லீ  தன் குடும்பத்தோடு இணைந்தாரா ? என்பதைப் புத்தகத்தை வாசித்து தெரிந்துக் கொள்ளுங்கள்.

இந்தப் புத்தகம் திரைப்படமாவதற்கு எல்லா வாய்ப்புகளும் பிரகாசமாக இருக்கிறது. பார்க்கலாம்.


Name:The Girl with Seven Names: A North Korean Defector’s Story
Originally published: July 2, 2015
Authors: Lee Hyeon-seo, David John
Original language: English
Nominations: Goodreads Choice Awards Best Memoir & Autobiography

அமேசான்:
https://www.amazon.com/Girl-Seven-Names-Korean-Defectors-ebook/dp/B00JD3ZL9U

படங்கள்: நன்றி இணையம்-
www.thestar.com
www.goodreads.com

Wednesday, August 9, 2017

த மேன் இன் ஹைய் கெசில் (The Man in the High Castle,1962) -நாவல்

சுதந்திர இந்தியாவை காங்கிரஸ் ஆளாமல் வேறோரு கட்சி
ஆண்டிருந்தால் இன்றைய இந்தியா எப்படி இருந்திருக்கும்
என கற்பனை செய்து பார்த்து இருக்கிறீர்களா?

இல்லை. தமிழ்நாட்டை திராவிடக் கட்சிகள் கடந்த அரைநூற்றாண்டுகள் ஆட்சிசெய்யாமல் இருந்திருந்தால் ?
என்பதை யோசனை செய்து பார்த்தது உண்டா ?

அதுபோல  இரண்டாம் உலகப்போரில் ஹிட்லரின் தலைமையிலான ஜெர்மனியப் படை வென்றிருந்தால் ? அப்படியொரு அதிகப்படியான கற்பனை செய்து  எழுதப்பட்ட புதினம் (நாவல்) "த மேன் இன் ஹைய் கெசில்" (The Man in the High Castle,1962 ). கற்பனை செய்தவர் எழுத்தாளர். பிலிப்.கே.டிக் (Philip K. Dick) .

கதைப்படி போருக்குபின்னால் வெற்றிபெற்ற  ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி எனும் மூன்று நாடுகள் பெரும்பான்மை உலகை தங்களுக்குள் பிரித்துக்கொள்கின்றன. ஹிட்லர்  உயிருடன் இருக்கிறார். வேண்டாதவர்கள் என நினைக்கப்படுபவர்கள் அழித்தொழிக்கப்படுகிறார்கள். தப்பிப்பிழைத்த சில யூதர்களும் தலைமறைவு வாழ்க்கை வாழ்கிறார்கள். அதுபோல உலகம் முழுவதும் வாழும்  கறுப்பர்கள் அடிமைகளாக மிகமோசமாக நடத்தப்படுகிறார்கள். அந்த உலகை நினைத்துப் பார்க்கவே அச்சமூட்டுகிறது.

பூமியைத் தாண்டி சந்திரன், செவ்வாய், வெள்ளி போன்ற பிற கோள்களும் காலனியாக்கப்பட்டிருக்கிறன. மிக வேகமாக பயணிக்கும் சாகச  விமானங்களை அவர்கள் கைவசம் வைத்திருக்கிறார்கள் என பல  சாத்தியமான விசயங்களை நம்பும்படியாக எழுதியிருக்கிறார்.

முக்கியமாக அமெரிக்கா ஜெர்மன், ஜப்பானியர்களால்
துண்டாக்கப்பட்டு ஆளப்படுகிறது. ஆனால்,  உண்மையில்
போருக்கு பின் ஜெர்மனிதான் மேற்கு,கிழக்கு என பிரிந்து கிடந்தது என்பது நாமறிந்த வரலாறு.

கதைப்படி  ஜெர்மனின் கிழக்கு அமெரிக்காவில் இருக்கும் ஒரு முன்னாள் போர் வீரன் ஜப்பான் ஆளுமையில் இருக்கும் மேற்கு பகுதியில் இருக்கும் ஒருத்தியை சில ரகசிய ஆவணங்களுடன் சந்திக்க பயணிக்கிறான்.

அந்த சந்திப்பு நிகழ்ந்ததா, அந்த ரகசியம் என்ன, அதன் பின் விளைவுகள் என்ன என்பதை நாவலை வாசித்து தெரிந்துகொள்ளுங்கள்.

வாசிக்கமுடியாதவர்கள் பார்த்தும் ரசிக்கலாம். ஆமாம்,
அமெரிக்காவில்  இந்தக் கதை அமெசானால் டிவி சீரியலாகவும் எடுக்கப்பட்டு நல்ல வரவேற்பைப்  பெற்றிருக்கிறது.  முதல் சீசனின் முதல்பாகம் கூட யூடியூபில் இலவசமாக கிடைக்கிறது. முடிந்தால் பாருங்கள்.

இதன் ஆசிரியர். பிலிப்.கே.டிக் (Philip K. Dick) ஒரு புகழ் பெற்ற அமெரிக்க எழுத்தாளர் கூட. பல வருதுகளைப் பெற்றவர்.  "பிளேட் ரன்னர்", "மைனாரிட்டி ரிப்போர்ட்" போன்ற பல பெருவெற்றி அடைந்த ஹாலிவுட் படங்கள் இவருடைய நாவல்கள் தான்.

Wednesday, August 2, 2017

மாணவர்களின் கேடயம்

கடந்த கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில்  திருவாரூர் மாவட்டத்தில்  100 சதம்  வெற்றி பெற்ற அரசுப்பள்ளிக்கள்
இரண்டு பள்ளிகளில்   ஒன்று மாங்குடி அரசு உயர்நிலைப்பள்ளி.

அங்கு 2016ல் "சிறகுகள் கல்வி அறக்கட்டளை"யின் கல்வி உதவித்தொகை வழங்கும்  நிகழ்வில்  'டிரஸ்ட் சார்பில்  எங்கள் பள்ளியைத் தத்து எடுத்துக் கொள்ளுங்கள்' எனும் கோரிக்கை வைத்தபோது, 'செய்யலாம்,  100 % ரிசல்ட்  கொண்டுவாங்க.'  என மேடையிலேயே அறிவித்திருந்தோம். அதைச் சவலாக எடுத்துக்கொண்டவர்கள் இந்த வருடம் எங்களாலும் முடியும் என நிருப்பித்திருக்கிறார்கள்.

ஒரு கிராமப்புற அரசுப்பள்ளியில்  100% வெற்றி என்பது பல தடைகளைத் தாண்டிய ஒரு சாதனை. அவர்களுக்கு எனது வாழ்த்துகள்.

இந்தச் செய்தியை நண்பர்களுக்கு முன்பே பகிர்ந்திருந்தேன் என

நினைக்கிறேன். அதன் தொடர்ச்சியாக இந்தவருடமும் அந்தப் பள்ளி மாணவர்களுக்கு  சிறகுகள் சார்பில்  கல்வி உதவித்தொகை வழங்கினோம்.

தேர்வில் முதல்  மதிப்பெண் பெற்றுத் தேர்ச்சி பெற்ற
சந்தியாவுக்கு ஐந்தாயிரமும் இரண்டாம், மூன்றாம் மதிப்பெண் பெற்ற ரூபன்ராஜ் , வினிதாவுக்கு 2,500, 1,000 வழங்கினோம்.

அதுபோல தமிழில்
சிறப்புகவனம் செலுத்துபவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் வருடந்தோரும் தமிழில்
முதல் மதிப்பெண் பெறுவருக்கு சிறப்பு பரிசாக
இரண்டாயிரத்து ஐநூறு வழங்குவோம்.  இந்தவருடம் அந்தப் பரிசையும் மாணவி சந்தியா பெற்றார்.  மனப்பூர்வமாக  வாழ்த்துகள் மாணவர்களே.

நாம் வழங்கும் இந்தச் சிறிய  உதவித்தொகை அவர்களின் உயர்க்கல்விக்கு எதேனும் ஒரு வகையில் உதவும் என கண்டிப்பாக நம்புகிறேன்.

வசதியானவர்களுக்கு தனியார் கல்வி எனும் இன்றைய நிலையில் எளியவர்களின் கடைசி நம்பிக்கை அரசுப்பள்ளிகள் மட்டுமே. அங்கே சுயநலமின்றி அக்கறையுடன்
உழைக்கும் ஆசிரியர்களும் இருக்கதான் செய்கிறார்கள். அவர்களின் முயற்சியில்லாமல் முழுதேர்ச்சி, நல்ல மதிப்பெண் எல்லாம் கண்டிப்பாக  சாத்தியமே இல்லை.  அவர்களுக்கு நமது
பாராட்டுகளும் , நன்றியும்.

பள்ளி தலைமை ஆசிரியர் கேட்டுக்கொண்டபடி வெற்றிபெற்ற எல்லா மாணவர்களையும் உற்சாகபடுத்தும் விதமாக
விழாவில் அனைவருக்கும் ஒரு கேடயத்தை நினைவுப்பரிசாக வழங்கினோம்.

எனக்கு இதுபோன்றதோரு உலோகக் கேடயத்தில் எல்லாம் பெரிதாக நம்பிக்கையில்லை. ஆனால், எளியவர்களுக்கு அவர்கள் பெறும் நல்ல கல்வி மட்டுமே வலிமையான கேடயம் என உறுதியாக நம்புகிறேன். அது நல்லதொரு ஆயுதம் கூட.  அவர்கள் எதிர்காலத்தில் வாழ்க்கையில் போராடி  வெல்ல அதைப் போன்றதோரு கூர்மையான வேறு ஆயுதம் இருக்கமுடியுமா என்ன ?

தேர்வில் மதிப்பெண்கள் முக்கியம் எனச் சொல்லும் அதே நேரத்தில் நமது கிராமப்புற மாணவர்களின் திறன் வளர்க்கப்படவேண்டும்
என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதற்கென பள்ளியில் பயிற்சிப்பட்டறைகள், குழு விவாதங்கள் நடத்தும்
எண்ணம் இருக்கிறது. நண்பர்களின் உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்கிறேன்.நன்றி

Tuesday, July 25, 2017

தீபன் - தமிழ்ப்படம்

எழுத்தாளர் ஷோபா சக்தி நடித்து ஜாக்யூஸ் அடியார்ட் எனும் பிரெஞ்ச் இயக்குநர்  இயக்கிய "தீபன்" எனும் தமிழ்ப்படத்தைச் சமீபத்தில் பார்த்தேன்.  இந்தப்படம் 2015 கேன்ஸ் திரைவிழாவில் சிறந்தப் படத்துக்கான தங்கப் பனை (Palme d'Or) பரிசு பெற்றது.

முதலில் படத்தின் கதையைச் சொல்லிவிடுகிறேன். இலங்கையின் உள்நாட்டுப் போரின்போது தப்பி கணவன், மனைவி, மகள் எனும் போர்வையில் பிரான்சில் அடைக்கலமாகும் மூன்று அந்நியர்களின் வாழ்க்கைக் கதை.

கதைப்படி கணவனாக நடிப்பவன் ஒரு  முன்னாள் தமிழ்விடுதலைப் போராளி, மனைவியாக, மகளாக நடிப்பவர்கள் போரில் தங்கள் குடும்பத்தை இழந்தவர்கள்.  இவர்கள் மூவரும் வெளிநாட்டில் நல்ல வாழ்க்கை அமைக்கவேண்டும் எனும் ஒற்றைப் புள்ளியில்  சந்திக்கிறார்கள்.

அவர்கள் வெளி உலகத்துக்கு ஒரு குடும்பமாகத் தெரிந்தாலும் அந்நியர்களாக இருப்பவர்கள் மனதளவில் ஒன்றாக இணைய முயற்சிப்பதன் சவால்களை அருமையாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

படத்தின் ஒரு காட்சியில் பள்ளி செல்லும் இளையாள் எனும் அந்தச் சிறுமி  மற்றவர்களின் பெற்றோர் தன் பிள்ளைகளுக்கு முத்தமிட்டு
வழி அனுப்புவதை ஏக்கத்தோடு பார்த்துவிட்டு 'எனக்கும் மத்தவங்க மாதிரி உம்மா குடும்மா ' எனக் கேட்கும் அந்தக் காட்சி உருக்கம்.

இப்படி அறிமுகமில்லாத தேசத்தில்  முற்றிலும் புதிய மனிதர்கள்
அந்நிய மொழியை அறிந்திருக்கவேண்டியதன் கட்டாயம் என 
அக மற்றும் புறச் சூழலில் புலம்பெயர்பவர்களின் போராட்டம் உணர்வுப் பூர்வமாக நம்கண் முன் விரிகிறது.

பல போராட்டங்களுக்கு பின் மூவரும் ஒன்றாக இணைந்து ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொண்டார்களா என்பதை தெரிந்துக்கொள்ள படத்தைப் பாருங்கள். படத்தின் இரண்டாவது பாதியை இன்னும் சிறப்பாக கையாண்டிருக்கலாம் என்பது எனது தனிப்பட்ட கருத்து. 

மற்றபடி முன்னாள் போராளியாக ஷோபாசக்தி தன்  உணர்ச்சிப்பூர்வமான நடிப்பால் நம் மனத்தைத் தொடுகிறார். அவரோடு இணைந்து நடித்திருக்கும் காளீஸ்வரி மற்றும் மகளாக வரும் சிறுமி குளோடின் வினாசித்தம்பி நடிப்பும் அபாரம். வாழ்த்துகள்.  தமிழ்ப் படங்களில் இவர்கள் பிரகாசித்தால் மகிழ்வேன்.

இந்தப்படத்தின் டிவிடி உபயம் உள்ளூர்  நூலகம்,  தமிழகத்தில்
வெளியானதா எனத் தெரியவில்லை.  

Saturday, July 22, 2017

சென்னை புத்தகத் திருவிழா -ராயப்பேட்டை YMCA

நண்பர்களுக்கு,

கிழக்கு பதிப்பகம் கடந்த ஜனவரியில் வெளியிட்ட  எனது  புதினம்
வனநாயகன்-மலேசிய நாட்கள்’ (நாவல்) ’சென்னை புத்தகத் திருவிழா’வில் (ஜூலை 21 முதல் 31வரை, ராயப்பேட்டை YMCAவில்) கிடைக்கும்.

டயல் ஃபார் புக்ஸ் (Dial For Books) ஸ்டால் எண்கள்- 104,105.  கிழக்கு ஸ்டால் எண்கள்- 95, 96.  நன்றி!!

அன்புடன்,
ஆரூர் பாஸ்கர்


இணையத்தில்:

இந்தியாவில் அமேசான் கிண்டில் வடிவில் வாங்க


இந்தியாவில் புத்தகமாக வாங்க

வெளிநாடுகளில் அமேசான் கிண்டில் வடிவில் வாங்க 

Friday, July 21, 2017

நீங்கள் வெகுளியா ? - அப்போ இதை முதல்ல வாசிங்க

"நாற்றம்" எனும் நல்ல சொல் அதன் இயல்பில் (மணம்) இருந்து திரிந்து கெட்ட வாடை எனும் பொருளில் தற்போது பயன்பாட்டில்
இருக்கிறது.

அதுபோல பயன்பாட்டில் இருக்கும் இன்னோரு சொல் "வெகுளி".
உலக நடப்பு அறியாத, கள்ளம் கபடமற்றவர்களை வெகுளி
எனச் சொல்கிறோம்.  அவன் 'சுத்த வெகுளி பய, அவன குத்தம் சொல்லாத ' என்பதெல்லாம் பேச்சுவழக்கில் மிகச் சாதாரணம்.

ஆனால், உண்மையில் வெகுளி என்பதற்கு கோபம் (சினம்) என்று பொருள்.

"அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்  இழுக்கா இயன்றது அறம் " என மனப்பாடம் செய்த  குறள் நினைவுக்கு வருகிறதா ?

ஆமாம், பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும் இடங்கொடுக்காமல் விலக்கித் தொடர்ந்து செய்யப்படுவது அறம் என்கிறது குறள்.

அந்த வகையில் பார்த்தாலும் நம்மில் பல வெகுளிகள் (கோபக்காரர்கள்) இருக்கத்தான் செய்கிறார்கள்.

Saturday, July 15, 2017

சுமோக்கி மலை - பயண அனுபவங்கள்-1

இந்தவருட கோடைவிடுமுறைக்கு வழக்கம்போல் குடும்பத்தோடு இந்தியா போகாமல் உள்நாட்டிலேயே செலவிடுவது என திட்டமிட்டு ஐந்து நண்பர்களின் குடும்பத்தோடு சுமோக்கி மலை (Smoky Mountains)   போயிருந்தோம். 

அதை முகநூலில் பகிர்ந்தபோது நண்பர்கள் பலர் சுமோக்கி "Smoky" குறித்து  விசாரித்திருந்தார்கள்.  ஒரு நண்பர் சுமோக்கியா ? இல்லை சுமோகியா? என்று கூடக் கேட்டிருந்தார்.

உண்மையில் சுமோக்கி மலை என்பதை "புகை மலை" என வேண்டுமானால் மொழிபெயர்க்கலாம்.   இந்த மலை மேல் இயற்கையான புகைவது போல்  பனிமூட்டம் எப்போதும் மூடிக்கொண்டிருப்பதால் "Smoky" என்கிறார்கள்.
மலை ஏறக்குறைய இரண்டு லட்சம் ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக 2 அமெரிக்க மாநிலங்களில் பரந்துவிரிந்து கிடக்கிறது.(வரைபடம்)

நாங்கள் இந்தவருடம் விடுதியில் தங்காமல்  மலையில் " கேபின்"  எனும் " மரவீடு"  வாடகைக்கு எடுத்துத் தங்கியிருந்தோம்.  சாதாரணமாக வீடு எனச் சொல்வதைவிடப் பெரிய
" பண்னை வீடு"  எனச் சொல்வது பொருத்தமாக இருக்கும்.   சகல வசதிகளோடு 5 படுக்கை அறையில்  25 பேர் தங்குவதற்குக் கூட தாராளமாய் இடமிருந்தது. 

விசாலமான சமையல் அறை, 25 பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து
உணவருந்த டைனிங் டேபுள்.  கூடவே பிள்ளைகளுக்கென விளையாட்டு அறை. அதில் வீடியோ கேம்ஸ், ஏர் ஹாக்கி இத்யாதிகள். பெரியவர்களின் நேரப்போக்கிற்கெனச் சுடுநீர்
தொட்டி (jacuzzi) ,
பூல் டேபுள் (pool table), அறுங்கோணவடிவில் போக்கர் டேபுள் (poker table) வசதிகளும் இருந்தன.

சுமோக்கி மலைக்குச் செல்பவர்கள் இதுபோன்றதொரு கேபினை முயன்று பாருங்கள். கண்டிப்பாக விரும்புவீர்கள்.

 போக்கரை சீட்டாட்டம் என ஒதுக்குபவர்கள் "பூல் டேபுள்" பக்கம் ஒதுங்கி
பில்லியர்ட்ஸை ஒரு கை பார்க்கலாம். பில்லியர்ட் ஸை திரைப்படங்களில்
மட்டும் பார்த்து அதிசயித்த
என்னைப் போன்றவர்கள்
அதை  10 நிமிடங்களில் கற்றுக்கொண்டு எளிதாக விளையாடத் தொடங்கலாம். சிரமமில்லை.நல்ல நேரப்போக்கு.

இல்லையென்றால் வீட்டில் இருந்தபடியே எதிரே பரந்து விரிந்துக் கிடக்கும் மலையை ரசிக்கலாம். அதுபோல,  ஆர்வமுள்ளவர்ளுக்கு வெளியே மலையேற்றம், படகுச் சவாரி போன்ற பல விசயங்கள் இருக்கின்றன.

கோடையில் பச்சை ஆடைபோர்த்தியது போலிருக்கும் இந்த மலை "இலையுதிர் காலம்"எனும் பாஃல்  சீசனில் வண்ண பட்டு
போர்த்தியதுபோல் ரம்யமாயிருக்கும்.

இன்னோரு முக்கியமான விசயம்.  மலைமேல் இருக்கும் இந்த வீடுகளை இரவில் அழையா விருந்தாளிகளாக
கரடிகள்  எட்டிப்பார்க்க வாய்ப்பிருப்பதால் கவனமாக இருப்பது நல்லது. மாலை நேரத்தில் சிறுவர்கள் வெளியே விளையாடும்போதும் கவனம் தேவை.

அப்படி எட்டிப்பார்க்கும் கரடிகள் குப்பைத் தொட்டிகளை வேட்டையாடவும் வாய்ப்பிருப்பதால் அதனை சகலபாதுகாப்புடன்
வைத்திருக்கிறார்கள் பாருங்கள். (படத்தில்)

அடுத்து, நண்பர்களுடன்மலையேறிய அனுபவத்தைப் பகிர்ந்துகொள்கிறேன். காத்திருங்கள்.

Sunday, July 9, 2017

தமிழில் "மங்கலம்" என்றால் ?

பொதுவாக வீடுகளில் ' விளக்கை அல்லது தீபத்தை அணைத்து விடு' எனச்சொல்வதை அபசகுனமாக நினைப்பார்கள். அதற்கு பதிலாக  'விளக்கைக் கையமத்தி விடு ' இல்லை  'விளக்கைக் குளிர வைத்துவிடு ' இப்படி ஏதோ ஒன்றைக் குறிப்பாக சொல்லி  உணர்த்துவார்கள்.

இப்படி அபசகுனமான  விசயங்களை நல்ல வார்த்தைகளால் சொல்வதைத் தமிழில் "மங்கலம்" என்பார்கள். (சகுனத்திற்கு எதிர்மறை "அபசகுனம்", மங்கலம் X  "அமங்கலம்" )

இதுபோல நம்மில்  பல மங்கலங்கள் நாட்டில் இருக்கின்றன. ஆடிமாதத்தில் பெண்கள் தாலிக் கயிற்றை மாற்றிவிட்டு புதிய தாலி அணிந்து கொள்ளும் சடங்கை   'தாலிப் பெருக்கு' என்பார்கள்.

அதுபோல ஒருவருடைய மரணத்தைப் பற்றிச் சொல்லும் போதுகூட
'காலமானார்', 'இயற்கை எய்தினார்', 'இறைவனடிச் சேர்ந்தார்', 'மீளாத்துயில் அடைந்தார்'  எனச்  சொல்வதும் மரபே.

நச்சுள்ள நாகப்பாம்பையே "நல்லபாம்பு" எனச் சொல்லும் நாம்தான், நெருப்புனா வாய் சுட்டற போகுதா ? என்றும் கேட்கிறோம். :)

குறிப்பு- மங்களம் வட சொல்.  மங்கலம் தமிழ்ச் சொல்.

Saturday, July 1, 2017

மெட்ராஸ் தமிழ்

மெட்ராஸ் சென்னை ஆகிவிட்டதால் 'மெட்ராஸ் தமிழ்'   சென்னை தமிழாகி 
விட்டது என்றே நினைக்கிறேன்.    பொதுவாகவே   'சென்னை தமிழ்' 
நமக்கெல்லாம்  ஏதோ நகைச்சுவை என்றவகையிலேயே   திரைப்படங்களின் வழியாக அறிமுகமாகி இருக்கிறது ( நடிகர்கள் சோ, கமல், லூஸ் மோகன்
போன்றவர்கள் இதை மக்களிடம் நேரடியாக எடுத்துச் சென்றார்கள்).

உண்மையில் தமிழ்நாட்டுடன் ஆந்திரா, கர்நாடகா, கேரளாவின் பகுதிகள் சேர்ந்திருந்த மெட்ராஸ் ஸ்டேடில் சென்னையை பூர்வீகமாக கொண்ட மக்களால் பேசப்பட்ட மொழி அது.

அதாவது வட்டார வழக்கு மொழி. தெலுங்கு,உருது,இந்தி, ஆங்கில மொழிகள் கலந்த கலவை அது . நடிகர் கமல் கூட இது குறித்து ஒரு பேட்டியில் விரிவாக பேசியதாக நினைவு. 

நமக்கெல்லாம் அறிமுகமான  ஒரு சென்னை வார்த்தை -பேமானி, அதன் மூலம் உருது. " பே இமானி"  (பே-இல்லாத, இமானி-நேர்மையானவன்) அதாவது நேர்மை இல்லாதவன்.

இன்று சென்னைக்கு  ஊர்புறத்திலிருந்து வீட்டுக்கு ஒருவர் வந்துவிட்ட சூழலில்
சென்னைக்கென்று  ஒரு தனித்தமிழ் இருப்பதாக தெரியவில்லை. வடசென்னைத் தவிர்த்து அந்த   'மெட்ராஸ் தமிழ்' சுத்தமாக வழக்கற்று போய்விட்டது என்றே நினைக்கிறேன்.

ஆனாலும்,  அதன் எச்சங்களாக இன்னமும் சில தமிழ் சொற்கள் சென்னையில் வித்தியாசமாக உச்சரிக்கப்படுவதை நீங்கள் கவனித்திருக்களாம்.

சட்டென நினைவுக்கு வரும் சில சொற்கள். கொய்யா- goiya, குடிசை- gudisai 
அதுபோலக் கும்பல்-gumbal.  இவையெல்லாம் தவிற்கப்படவேண்டிய ஒலிப்புப்பிழைகள்.