Friday, November 25, 2016

அரசியல் பழகு - சமஸ்

சமீபத்தில் பத்திரிக்கையாளர் சமஸின் "அரசியல் பழகு" எனும்
சிறு நூலை வாசித்தேன்.   இது ஆசிரியர் தமிழ் இந்துவிற்காக
2016 ஆம் ஆண்டுத் தேர்தலின் போது எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு.



இந்தக் கட்டுரைகளை எழுதும் முன் ஆசிரியர் தமிழகத்தின் வெவ்வேறு  பின்புலம் கொண்ட 25,000   கல்லூரி மாணவர்களைச் சந்தித்திருக்கிறார். அதனால் இந்தக் கட்டுரைகள் இன்றையத்
தலைமுறையின் உண்மையான மனஓட்டத்தைப் புரிந்து  கொண்டு எழுதப்பட்டிருக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை. அந்த இளைஞர்களுக்கு, அவர்களின் பெற்றோருக்கு அரசியல் அறிமுகத்துக்கு அறைகூவல் விட்டு அழைக்கும் வகையிலேயே நூல்  " அரசியல்  பழகு"  எனத் தலைப்பிடப்பட்டுள்ளது.

சமூக பார்வையற்ற கேளிக்கைகள், "படிக்கும் போது உன் கேரியர் முக்கியம்"  எனச் சொல்லி  வளர்க்கப்படும் மாணவர்கள், "அரசியல் ஒரு சாக்கடை அது நமக்கானதல்ல "  எனும் பொதுபுத்தி போன்ற பல சமூக சீர்கேடுகளைக் கண்டித்திருக்கிறார். அந்த  மனப்பான்மை மாற வேண்டும்  என்ற கருத்துடைய "அரசியல் ஆபத்து.. த்ரிஷா இல்லனா நயன்தாரா கலாச்சாரம்"  என தனது முதல் கட்டுரையைத் தொடங்குகிறார்.

சமூகம், அரசியல் பிரஞை  எதுவுமற்ற சூழல் ஆபத்தானது என்பதைச்சொல்லும் அதே வேளையில் அரசியல் விழிப்புணர்வு ஏன் இன்றைய அவசரத் தேவை என்பதை நாட்டின் இன்றைய சமூக சீர்கேடுகளின் மூலம் சுட்டிக் காட்டுகிறார். அதற்க்காக  உலக அரங்கில் இந்தியா பற்றிய பல தரவுகளை ஆதாரப்பூர்வமாக முன்வைகைக்கிறார்.

அதேபோல,  இந்தியா மிகப் பெரிய ஜனநாயகநாடு, நமது அரசியலைமைப்புச் சட்டம் அனைவருக்குமானது  என்பதை  பல இடங்களில் தொடர்ந்து வலியுறுத்துகிறார்.  தேர்தலில் நம் ஒவ்வொருவருடைய ஒட்டும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியதே என்பதையும் அழுத்தமாக பதிவுசெய்கிறார்.

ஆனால், இன்றைய தலைமுறைக்கு நல்ல தலைவர்களாக அடையாளம் காட்ட ஆசிரியருக்கு சுதந்திரம் பெற்ற  இந்தியாவில் காந்தி, நேரு,காமராஜ்  என விரல்விட்டு எண்ணும் தலைவர்களே
இருப்பது நாம் வருத்தப்பட வேண்டிய விசயம்.

உண்மையைச் சொல்வதென்றால்,    நாம்  பொதுவாக   அரசியல் பற்றி பொதுவெளியில் (என்னையும் சேர்த்து) பேசுவதில்லை இல்லை அப்படிப் பேசத் தயங்குகிறோம். அந்த தயக்கங்கள் முற்றிலுமாக ஒழிந்து அரசியல் என்பது அடிப்படையில் சகமனிதருக்கும் நமக்குமான உறவு என்பதை உரத்துச் சொல்ல முயலும் நூல். வாய்ப்பிருந்தால் கண்டிப்பாக வாசியுங்கள்.

இது அரசியல் அறிந்தவர்களுக்காகான நூல் இல்லை எனும் ஆசிரியர் குறிப்புடன் இருக்கும் இந்த நூலின் விலை ரூபாய். 20, பக்கங்கள்-48

படம்- நன்றி இணையம்


அரசியல் பழகு
சமஸ்
துளி வெளியீடு
விலை : ரூ.20

3 comments:

  1. // இந்த நூலின் விலை ரூபாய். 20, பக்கங்கள்-48
    அரசியல் பழகு
    சமஸ்
    துளி வெளியீடு
    விலை : ரூ.48
    விலை ரூ:20 அல்லது ரூ:48 ஆ எது சரி?

    ReplyDelete
  2. சரி செய்துவிட்டேன். சுட்டிக்காட்டியதற்கு நன்றி!

    ReplyDelete