Sunday, July 10, 2016

சொல்வனம் இதழில் ...

நண்பர்களே,  இந்த வார சொல்வனம் இணைய இதழில் புத்தக அறிமுகம் பகுதியில் எனது  ’பங்களா கொட்டா’ நாவல் வாசகர்களுக்கு அறிமுகமாயிருக்கிறது.
உங்களின் வாழ்த்துக்களுக்கும், தொடரும் ஆதரவுக்கும் நன்றிகள் பல.
இனி  சொல்வனத்திலிருந்து..
// *****************
சொல்வனம் பத்திரிகையில் சிறுகதைகள் எழுதி இருக்கிற ஆரூர் பாஸ்கரின் முதல் நாவல் வெளியாகி இருக்கிறது. ’பங்களா கொட்டா ‘ என்ற தலைப்பு கொண்ட இப்புத்தகம் பற்றி அவர் சொல்கிற சில வார்த்தைகளை இங்கே கொடுக்கிறோம்.
விவசாயப் பின்னணியில் வந்த எனக்கும் கிராமங்களுடன் நீண்டதொரு பிணைப்பு உண்டு. இன்று அமெரிக்க மண்ணில் புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும் இன்றும் அதன் நினைவுகளைச் சுமந்து திரிபவன். பால்யத்தில் நான் கேட்ட செவிவழிக் கதைகளையும், எனது கிராமத்து நினைவுகளையும் எழுத்தில் மீட்டெடுத்த முயற்சிதான் ‘பங்களா கொட்டா’ எனும் இந்த நாவல்.
நானும் என் முன்னோர்களும் நூற்றாண்டுகளுக்கு மேலாக வாழ்ந்த வாழ்கையின் மெளன சாட்சி எங்கள் கிராமம். அந்த கிராமம் என் கண் முன்னே மாறிக்கொண்டிருக்கிறது. இப்படி வெகு வேகமாய் நகர்மயமாகும் அல்லது நகரமயமான லட்சக்கணக்கான கிராமங்களில் எங்கள் கிராம்மும் ஓன்று என்று சொல்லிக் கொள்வதில் எனக்கு பெருமை ஓன்றுமில்லை. ஆம், வேப்பங் குச்சியிலிருந்து பற்பசைக்கும், தாவணியிலிருந்து சுடிதாருக்கும், நைட்டிக்கும், கறவை பாலிலிருந்து பாக்கெட் பாலுக்கும் மாறிவிட்ட கிராமங்கள் அவை.
அந்தக் கிராம சூழலில் வெவ்வேறு காலக் கட்டத்தில் வாழ்ந்த மனிதர்கள், அவர்களின் வாழ்வை சிறிது கற்பனை கலந்து ஓரு நாவலாக்கியிருக்கிறேன்.
ஒரு பெரும் கனவை நனவாக்கிடத் துடித்து வாழ்க்கையை அர்பணிக்கிறவனின் கதைதான் ‘பங்களா கொட்டா’. உயிர்ப்பின்மையோடு இயங்கும் உலகில், விவேகத்தோடும், முதிர்ச்சியோடும் தன் சுயத்தைத் தக்க வைத்துக் கொள்ளப் போராடும் ஞானி (கதையின் நாயகன்), அதன் பொருட்டு அவன் சந்திக்கிற மனப் போராட்டங்கள் இவைதான் இந்நாவலின் மையம்.
இந்தியா சுதந்திரமடைந்த பிறகு, 1950- களின் நடுவில் கல்வியே தம் விடுதலைக்கான திறவுகோல் என்பதை வலுவாய் உணர்ந்து கொண்ட ஒரு தலைமுறையின் எழுச்சிதான் அன்று பல பள்ளிகளும், கல்லூரிகளும் உருவாகக் காரணமாக இருந்தது. ஆனால், இன்று அதே கல்வி அமைப்புச் சீரழிந்து, கல்வி வள்ளல்கள் வசூல் தந்தைகளாக மாறி, கல்வி நிலையங்கள் கொள்ளையடிக்கிற வணிகக் கூடரங்களாக மாறிவிட்ட நிலையில், கல்வியின் மேன்மையைப் பற்றி ஓரு காலத்தில் சிந்தித்துச் செயலாற்றியவர்கள் இருந்தார்கள் என்கிறது இந்த நாவல்.
இந்தக் கதையில் – மல்லாரி வாசிக்கையில் பச்சை வண்ணப் பட்டு உருமாவை பரிவட்டமாய் கட்டிக் கொண்ட நாயகன் ஞானி. முண்டாசோட சேர்த்து ஆறடி உயரமிருக்கும் ராசு. விடிய கருக்கல்ல வந்துட்டு பொழுதுவரைக்கும் பண்ணையிலேயே கதியாய்க் கிடக்கும் சின்னு , கல்லறுக்க பண்ணைக்கு வந்த பவுனு எனப் பல மனிதர்கள் பல நிறங்களில்.
இந்த நாவலில் உங்கள் கிராமத்தையோ அல்லது அங்கே வாழ்ந்த மனிதர்களின் சாயலில் வேறு யாரையேனும் ஓருவரை கண்டிப்பாக நீங்கள் பார்க்ககூடும்.
இந்த நாவலை, தரமான இலக்கிய நூல்களை வெளியிடும் அகநாழிகை பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
 *****************//
அதன் நேரடி இணைப்பு இங்கே
#bunglawkotta

No comments:

Post a Comment