Tuesday, March 8, 2016

அந்த இளம் பெண் செய்தது சரியா?


    கடந்த டிசம்பர் முதல் வாரத்தில் திட்டமிட்டிருந்த சென்னை பயணத்தை 
மழையின் காரணமாக ரத்து செய்திருந்தேன். அதற்கு பின்பு கடந்த மாதம் சென்னை சென்ற வந்த எனது பயண அனுபவங்கள்.

நான் பயணத்தை ஓத்திப் போடாமல் டிக்கெட்டை ரத்து செய்ததால் பெரிய தொகையை இழக்கும்படியாகிவிட்டது. நான் எதேர்சையாக டிராவல் இன்ஷியூரஸ் எடுத்திருந்ததால் பெரிய இழப்பின்றி தப்பித்தேன். ஆனால் அதை அவர்களிடம் இருந்து வாங்குவதற்குள் தலையால் தண்ணீர் குடிக்க வேண்டியிருந்தது.

உலகம் முழுவதும் பயணக் காப்பீடு செய்யும் வாடிக்கையாளர்களின் பாடு பெரிய திண்டாட்டம் தான் போல. உதாரணத்திற்கு பணம் செலுத்திய உடனே மின்னஞ்சலில் காப்பீட்டை அடுத்த நொடியில் அனுப்பினார்கள். ஆனால் இழப்பீடு என அணுகும் போது மட்டும் அதற்கான பதிலை ஆற அமர யோசித்து இரண்டு வாரம் கழித்து தபாலில் நிராகரிக்கப்பட்டது என்று அனுப்புகிறார்கள்.

நானும் விடாப்பிடியாக பக்கம் பக்கமாக பதில் மேல் பதில் எழுதி ஓருவழியாக அவர்களிடமிருந்து நஷ்டயீட்டை வாங்கிவிட்டேன்.

டிக்கெட்டை இந்த முறை கத்தார் எர்வேயிஸ் எடுத்திருந்தேன். அதனால் பயணத்தின் முதல் விமானம் மியாமியிலிருந்து கதார் நாட்டின் தோஹா வரை பின் அங்கிருந்து சென்னை வரை. 


வழக்கமான கெடுபிடிப் பாதுகாப்புச் சோதனைகள். ஓவ்வொரு முறையும் கெடுபிடிகள் அதிமாகின்றதே தவிர குறைவதற்கான அறிகுறிகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

மியாமிலிருந்து புறப்பட்ட அந்த முதல் விமானத்தில் நிறைய இருக்கைகள் காலியாக இருந்தன. ஓரு டிக்கெட் எடுத்த எனக்கு சேர்ந்தார்போல் மூன்று இருக்கைகள் தந்தார்கள். மிக வசதியாக போயிற்று. கை, காலை நீட்டினேன்.

அதில், எனது குளிர் கண்ணாடியைத் தொலைத்ததைத் தவிர வேறு எதுவும் சொல்லிக் கொள்வது மாதிரி நடக்கவில்லை. சன் கிளாஸுக்கு குளிர் கண்ணாடி என்பது சரியான மொழிபெயர்ப்பா? தெரியவில்லை. தெரிந்தால் சொல்லுங்கள் சரிசெய்து விடுகிறேன். அதுபோல சைவ உணவுக்கும் பெரிதாக பிரச்சனையில்லை. அதில் ருசியெல்லாம் பார்ப்பது நியாமாயிருக்காது என நினைக்கிறேன். அந்த விமானத்தில் கையிலிருந்த புத்தகங்களை வைத்து சமாளித்துவிட்டேன். அதைப் பற்றி பிறகு விரிவாக எழுதலாம்.

இரண்டாவது விமானத்தில் பெரும்பாலும் தமிழர்கள்தான் எனச் சொல்லத் தேவையில்லை. ஆனால் அதிலும் ஓன்றிரண்டு வெளிநாட்டுத் தலைகளும் உண்டு.  அந்த விமானத்தில் பல சுவாரஸ்யங்கள்.

குழந்தைகளுடன் இருந்த குடும்பங்களைப் பார்க்க முடிந்தது. சொல்லிவைத்தது போல் எல்லோரும் தங்கள் இருக்கையின் முன்னால் இருந்த தொடுதிரை  (Touch Screen) டிவியில் தமிழ் படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.  சினிமாக்களில் நடிகர் சூர்யாவும் கார்த்தியும் அடர் வண்ண உடைகளில் பெரிய மீசை வைத்து மிரட்டிக் கொண்டிருந்தனர். திரையில் தேவர் மகன் போல் பெரிய மீசைவைக்க அண்ணனும் தம்பியும் குத்தகை எடுத்துவிட்டார்களா தெரியவில்லை.

இரண்டு வரிசைகள் தள்ளி உட்கார்ந்திருந்த ஓரு வெளிநாட்டு பெண்மணியிடம் அருகிலிருந்த சுத்த தமிழ் மங்கையொருத்தி ஆங்கிலத்தில் சிரித்து சிரித்து பேசிக் கொண்டிருந்தாள். அந்தச் சிரிப்பையும் குதுக்காலத்தையும் அவள் சகத் தமிழ் பயணியிடம் கண்டிப்பாக காட்டமாட்டாள் என்பது என் கணிப்பாயிருந்தது.

கவனித்த இன்னோரு விஷயம், புத்தகவாசிப்பு. ஓருவர் கூட மருந்துக்கு
புத்தகங்களை தொட்டது போல தெரியவில்லை.ம்ம்.. எனக்கு அடுத்து உட்கார்ந்திருந்த புஷ்டியான கூட அதற்கு விதிவிலக்கில்லை. அவன் தன் பங்குக்கு ஆங்கிலக் கார்டூன் பார்த்துக் கொண்டிருந்தான்.

தன் வயதுக்கு மிஞ்சிய அளவில் இருந்த அவனுக்கு வீட்டில் நல்ல ஊட்டம் போலிருக்கிறது. நான் தெரியாதனமாக அவருடைய அப்பாவிடம் ' என்னங்க பையனுக்கு 4 வயசு இருக்குமா ? ' எனக் கேட்டேன். ' இல்லங்க, 2 தான் '  என்று முறைத்தவர் கடைசிவரை என்பக்கம் திரும்பவே இல்லை. நான் என்னை நொந்து கொண்டேன்.

அந்த இளம்தாய் விஷயத்திற்கு வருகிறேன்.  அவர் பின் சீட்டில் இரண்டு அல்லது மூன்று வயதுடைய சிறுமியுடன் இருந்தார். சிறுமி அம்மாவைப் போல பெரிய கண்களுடன் துறுதுறு வென்று இருந்தாள்.

அவர் அந்தச் சிறுமியை மடியில் அழுத்திபிடித்து  தட்டிகொடுத்து தூங்க வைக்க முயற்சித்துக் கொண்டிருந்தார்; பலனில்லை. அடுத்த முயற்சியாக ஆங்கில ரைமிஸில் தாலாட்டு பாடத் தொடங்கினார். தமிழ்நாட்டிலும் பெரும்பாலான குடும்பங்களின் இன்றைய நிலை இதுதானா? . குழந்தைகளுக்கு தாலட்டையே ஆங்கிலத்தில் பாடத் தொடங்கியபின். அப்புறமென்ன? . ஆங்கில வழிக் கல்வி, ஆங்கிலத்தில் கார்ட்டூன் , படித்தால் ஆங்கில புத்தகங்கள் எனத் தொடராமல் என்னதான் செய்வார்கள்.

அந்த பெண்ணுக்கு குரலும் மிக இனிமையாகத்தான் இருந்தது. ஆனால் சிறுமிதான் கேட்கும் மனநிலையில் இல்லை. நான்கு, ஐந்து பாடல்களை தொடர்ந்து பாடியும் சிறுமி தூங்குவதற்கான எந்த அறிகுறியும் இல்லை.

அந்த தாயும் என்னதான் செய்வார்- பாவம். ஓருகட்டத்தில் பொறுமையிழந்து விட்டு விட்டார். உடனே விட்டால் போதுமென அந்த சிறுமி சீட்டில் எழுந்து நின்று மீண்டும் விளையாடத் துவங்கினாள். அருகில் இவ்வளவு நடந்து கொண்டிருக்கும் போதும் பக்கத்திலிருந்த அவளுடைய கணவன் எந்தவித அலட்டலுமின்றிக் காதில் ஹெட்போனுடன் படம் பார்த்துக் கொண்டிருந்தார். 

நான்  சும்மா இல்லாமல் கடைசியில் இருக்கையிலிருந்து எழுந்து வரும் போது அந்த பின் சீட் பெண்ணிடம்  'ரொம்ப நல்லா பாட்டு பாடுனிங்க..' என பாராட்டிவிட்டு வந்தேன். அவர் அதை தன் கணவனின் காதருகில் சொல்லி வெட்கத்தோடு சிரித்துக் கொண்டிருந்தாள்...

அதைக் கேட்ட அந்த கணவனின் முகம்போன போக்கை, நீங்கள் பார்திருக்க வேண்டுமே..

தொடருவோம்..

படங்கள் நன்றி;
www.qatarairways.com

No comments:

Post a Comment