Wednesday, December 31, 2014

2015 - புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!!

முதலில் அனைவருக்கும் 2015 ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!!

USAல் இன்னும் நள்ளிரவு நெருங்கவில்லை,  எனக்கு இந்த வருட கொண்டாட்டம் CNNன் ஆண்டர்சன் கூப்பர் மற்றும் கேத்தி க்ரிஃபினுடன் தான்.

புத்தாண்டை வரவேற்க்கும் இந்த நேரத்தில் 2014ல் நடந்த சில நல்ல நிகழுவுகளை கொஞ்சம் அசை போட்டுப் பார்க்கிறேன்.

2014ல்  நான் பெரும்பாலான இலக்குகளை தொட்டிருக்கிறேன்.

1 . என்னுடைய பல வருடத்திய கவிதைகள் தொகுப்பட்டு முதல் கவிதை நூல் "என் ஜன்னல் வழிப் பார்வையில் " வெளியிடப்பட்டது. கவிதை நூல்

2.  சிறகுகள் அறக்கட்டளை  தமிழ்நாட்டில் அதிகாரப் பூர்வமாக பதிவு செய்யப்பட்டுவிட்டது.

இதை தாண்டி வாரதிற்க்கு ஒரு முறை நீச்சல், குறைந்த பட்சம் மாதத்திற்கு இரண்டு பதிவுகள் (Blog Post) என அதுவும் சரியான இலக்கில். ஹே!!

என்னோடு சேர்ந்து நீங்களும் 2014யை கொஞ்சம் ரீவைன்ட் பண்ணிப் பாருங்களேன்.

2015 க்கு கொஞ்சம் வருவோம்.

ஒவ்வொருவரும் புத்தாண்டை வேவ்வேறு காரணங்கலுக்காக
எதிர்பார்த்து காத்திருப்பார்கள். சிலருக்கு திருமணம் உறுதியாகிருக்கலாம்
அல்லது புதிதாக குழந்தையின் வரவை எதிர்பார்த்திருக்கலாம் இப்படி பல.

எதுவும் குறிப்டும் படியாக இல்லாவிடிலும் புது வருடத்தில் தொடங்கும் எல்லா நிகழ்வுகளும்  நல்லதாக இருக்க வேண்டும் எனும் எதிர்பார்பிருக்கும்.
அவர்களுக்கு வாழ்த்துக்கள்..

சிலர்  புத்தாண்டு தீர்மானங்களில்  சிக்கி கொள்கின்றனர்.  இந்த வருடம் குடும்பத்தோடு நேரம் செலவழிப்பேன்,   ஜிம்மில் சேர்ந்து உடல் எடையைக் குறைப்பேன் எனப் பல தீர்மானங்கள் எடுப்பார்கள்.  அதில் எந்த அளவு வெற்றி அடைகிறார்கள் எனபது ஐயமே.

ஒரு ஆய்வின் படி, இந்த தீர்மானங்களில் பல, சில நாட்களையோ அல்லது கொஞ்சம் அதிகமாக வாரங்‌களையோ தாண்டுவதில்லை.

என்னை பொருத்தவரை,  சோம்பலின்றி மூச்சை பிடித்து ஒரு சில மாதங்கள்   கடந்து விட்டால்  நீங்கள் அதை வெற்றி பாதையில் முடிக்க பெரிதாக தடை ஏதும் இருக்காது.

எடுத்த காரியம் மேல், உங்களுக்கு தேவை அர்ப்பணிப்பு (Dedication) அன்றி வேறொன்றும் இல்லை.

2015 திட்டங்கள் என்னனு கேட்கிறது காதில் விழுகிறது.  நான் கொஞ்சமா சொல்லிட்டு நிறையா செய்ற ஆளுமில்ல, நிறையா சொல்லிட்டு கொஞ்சமா செய்ற ஆளுமில்ல. ஆனா, சொல்லாமலே செய்ற ஆளுங்கோ! :)

"மனதில் உறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்

நெருங்கின பொருள் கை பட வேண்டும்
கனவு மெய்ப்பட வேண்டும்"
..
என பாரசக்தியை வேண்டி புது வருடத்தை உற்சாகாமாய் தொடங்குவோம்.  நல் வாழ்த்துக்கள்!!


மின்னஞ்சல் தொடர்புக்கு:
aarurbass@gmail.com

இந்தியாவில் என் நூல்களை வாங்க:Click


முகநூல் (Facebook):
https://www.facebook.com/ejvpbook



Tuesday, December 30, 2014

சிறகுகள் - பற பற!!

கடந்த வாரம் "சிறகுகள் கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை" தமிழ்நாட்டில் அதிகாரப் பூர்வமாக பதிவு செய்யப்பட்டுவிட்டது.

என்னுடய "என் ஜன்னல் வழிப் பார்வையில்"   கவிதை தொகுப்பில் குறிப்பிடப்பட்டிருந்த கல்வி அறக்கட்டளை இதுவே.  புத்தக விற்பனையிலிருத்து திரட்டப்படும் நிதி இந்த அறக்கட்டளைக்கே நன்கொடையாக வழங்கப்படும்.

சிறகுகள் பற்றி அறிய விரும்பும் அன்பர்களுக்கான ஒரு பிரத்தியேகமான நேர்காணல் இங்கே :)


சிறகுகள் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்:

சுற்றுச்சூழக்காக மரஙகள் நடுவது வரை சட்ட அனுமதியிருந்தாலும்,
சிறகுகளின் இப்போதய தலையாய நோக்கம் வசதி வாய்ப்பற்ற மற்றும் கிராமப் புற மாணவர்களின் கல்விக்காக உதவி செய்வது.

இதற்கான எண்ணம்: 

இதற்கான எண்ணம் மிக நாட்களாக இருந்தாலும்,  நண்பர்கள் மற்றும் உறவினர்கள்  தந்த தொடர் ஊக்கமும் நம்பிக்கையும் தான்  இதைத் தொடங்க தெம்பு வந்தது.

ஆனாலும் குடும்பம், வேலை என கடமைகளை தாண்டி இதற்காக  ஒரு நேரத்தை ஒதுக்க வேண்டும். தவிர அறக்கட்டளை தொடங்குவதின் ஆழத்தையும் தேவையான மேலாண்மையும் நன்றாக யோசித்தேன்.

கடைசியில் நல்லது நடந்தால் நல்லது என செயல்படுத்த துணிந்து விட்டேன். இதற்கு அவசரப்படாமல்  கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் எடுத்துக் கொண்டேன். என் எழுத்து, எங்கோ தேவைபடும் ஒருவருக்கு உதவும் எனில் அதை தவிர வேறென்ன மகிழ்ச்சி இருக்க முடியும். சொல்லுங்கள்!


சிறகுகள் எனும் பெயரை தேர்வு செய்தது எப்படி?

தெளிவுடன், தன்னம்பிக்கை, வலுவுடனும் சமூக வானில் பறக்க தேவையான சக்தியை தரவல்லது  கல்வி எனும் சிறகே.

அந்த சுதந்திர சிறகுகளின் நினைவூட்டலாகவே இந்த பெயர்.

"பசியால் வாடுபவனுக்கு ஒரு வேளை உணவு கொடுப்பதை விட, மீன் பிடிக்க கற்றுக் கொடுத்தால்,  வாழ்நாள் முழுவதும் அவன் நிம்மதியாக சாப்பிடுவான்...' எனற பழமொழி நீங்கள் அறிந்தது.

முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜெ.அப்துல்கலாமின்  'அக்னி சிறகுகள்' நூலும் ஒரு தூண்டுதல்.

இதற்கான தற்போதய தேவை என்ன ?

தாராள மயமாக்கப்பட்ட இந்தியாவில் தமிழ் நாட்டின் தலைஎழுத்து முற்றிலும் மாற்றி எழுதப்பட்டுவிட்டதாக ஒரு தவறான எண்ணம் பலரிடம் ஏற்பட்டுள்ளது.

சென்னை போன்ற பெருநகரங்களில் கல்வி நிறுவனங்கள் உலகத்தரத்திற்கு கல்வியை தர முயற்சி செய்துகொண்டிருக்கிறனர். அங்கே பெற்றோர்கள் கடன் வாங்கியாவது தரமான கல்விக்காக தனியார் பள்ளிகளில் பிள்ளைகளை நுழைத்து விடுகின்றனர்.

ஆனால் வாய்ப்புகள் அற்ற சிறு நகரங்களிலும், கிராமப் புறங்களிலும் பயிலும் மாணவர்களின் நிலையில் பெரிய மாற்றமில்லை.

அவர்கள் அரசுப்பள்ளிகளையோ அல்லது அரசுமேலாண்மை பள்ளிகள் எனப்படும் Management Schools யை நம்பி இருக்கவேண்டிய சூழல். அங்கே நிதி மற்றும் ஆசிரியர்கள் பற்றாக்குறை தவிர உள் கட்டமைப்பின்மை என பல சிக்கல்கள்.

தவிர நகரங்களை போன்று சரியான கல்வி வழிகாட்டுதாலோ அல்லது வாய்ப்புகளோ பலருக்கு அங்கே கிடைப்பதில்லை. அந்த மாணவர்களுக்கு  நிதி உதவி மற்றும் வழிகாட்டுதலுக்கு 'சிறகுகள்' முயற்சி செய்யும்.

மேலும், நம்மில் உதவி  செய்ய நிறையப்பேர் தயாராக இருக்கிறார்கள்.  அதை சரியான பயனாளிகளிடம் கொண்டு சேர்க்க  ஒரு அறக்கட்டளை தேவையானதாக இருந்தது.


எப்படி செயல்படுத்த திட்டம்?

என்னை தவிர மேலும் நான்கு பேர்  'சிறகுகளில்' உறுப்பினர்களாக உள்ளனர். நான் அமெரிக்காவில் வசித்தாலும், அவர்களின் உதவி மற்றும் ஓத்துழைப்புடன்  இதை செயல்படுத்துவதாகத் திட்டம்.

அதில் ஒருவர் பள்ளி ஆசிரியர், இன்னொருவர் மனித வள மேம்பாட்டுதுறையில் பணி புரிபவர். மேலாக அனைவருக்கும் நல்ல உதவும் உள்ளம் உள்ளது.

வரும் நாட்களில், நீங்கள்  யாருக்கேனும் உதவ வேண்டும் என நினைத்து பணம் அனுப்பி வைத்தாலும் பெற்றுக் கொள்வதாக உத்தேசம்.

குறைந்த பட்சம் ஓவ்வொரு காலாண்டுக்கேனினும் ஒரு செயலைச் செய்து முடிப்பது  இப்போதய  திட்டம்.

முதல் கட்டமாக எனது கவிதை நூல் விற்பனையின் முழு தொகையும் சிறகுகளுக்கு வழங்கப்படுகிறது.

அடுத்தது என்ன ?


திருவாருர்க்கு அருகில் உள்ள ஒரு அரசு பள்ளிக்கு நூலக உபகரணங்களும், புத்தகங்களும் வழங்க ஆசிரிய நண்பர் ஒருவர் மூலமாக ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறோம். மேலும் சொல்கிறேன்.

இது ஒரு சிறு தொடக்கமே, கடந்து போக வேண்டிய பாதை அதிகம். ஆனால்,நம்பிக்கையுடன் இருக்கிறேன்.

SIRAGUKAL - An Educational Trust


As all of you know, I have published my first book titled as "En Jannal Vazhi Paarvaiyil" few months back.


During that process I also committed myself to an initiative, which is to start an educational trust. 

Today, I am happy to announce that a trust named as "SIRAGUKAL EDUCATIONAL AND CHARITABLE TRUST" has been registered in Tamil Nadu, India.


What is the goal ?

The primary goal is to support initiatives in education for the poor kids in rural areas of Tamil Nadu.

When I briefed my Idea for a trust, my family and close relatives welcomed it.

But, I know from my bottom of my heart that this requires lot of commitment and time. After lot of thoughtful consideration, I decided to go forward to help the needy and start this trust.

Execution plan:

Other than me there are four more trustees in India. One of them is a school teacher and another is a HR executive. All of them have the tendency to help others.

Thinking of completing at least one project for every quarter, which depends on the size of the project as well.

Even I have strategy to raise the fund from volunteers interested to contribute.

What are the next steps?

As first step, I will be donating ALL book sales proceeds to Siragukal.

We are working with a teacher friend to donate books and other library items for a government school near Thiruvarur, Tamil Nadu. Will keep you posted.

This is a small first step towards the beginning a long journey. please reach out me if you have any suggestions and wish me all the best!.


Tuesday, December 23, 2014

இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் - ஒரு சாகாப்தம்

 இயக்குனர் சிகரம் பாலசந்தர் காலமான தகவலை நண்பர் "வாட்ஸ் அப்" மூலம் அனுப்பி இருந்தார்.

அந்த தகவலை இணையத்தில் உறுதி செய்தபின்பு இதை எழுதத் தொடங்கினேன். கட்ந்த சில நாட்களாக சில விஷமிகள் தவறான பிரச்சாரம் செய்தது நினைவிருக்கலாம்.

பாலச்சந்தர் என்று ஒருமுறை மனதுக்குள் சொல்லி பார்த்தபடி அவருடய படங்‌களை ஒருமுறை மனத்திரையில் ஓட விட்டேன்.

பாலச்சந்தர் எனக்கு அறிமுகமானது சிந்து பைரவி, உன்னால் முடியும் தம்பி , மனத்தில் உறுதி வேண்டும் போன்ற படங்களின் மூலம் தான்.

அப்போது எனக்கு பத்து பன்னிரெண்டு வயது இருக்கலாம், ஆனாலும், அவை என்னுள் மிகப்பெரிய தாக்கதை ஏற்படுத்தியது என்பது மிகையில்லை.

அந்த கால கட்டத்தில் அந்த மனித உறவு முறைகளுக்கு இடையிலான சிக்கல்கள், சமூகப் பிரச்சினைகள் போன்ற கருத்துக்களை திரையில் சொல்ல அவருக்கு இருந்த துணிவைக் கண்டு இப்போது வியக்கிறேன்.

பாலசந்தர் என்றால் வித்தியாசம் என்றே மக்கள் உணர்ந்திருந்தனர். மேலும் அவர் படத்தில் எந்த ஒரு காட்சியையும் மனத்தில் அழகாய் பதிய செய்வதில் வித்தகர்.

உதாரணமாக மனத்தில் உறுதி  படத்தில் பின்னணியில் பாரதியின் 'மனத்தில்
உறுதி  வேண்டும்' பாடல் ஒலிக்க நாயகி சுஹாசினி குடும்பத்திற்காக உழைப்பது போல காட்சி வரும். அவை ஆண்டுகள் பல கடந்தாலும் மனதில் நீங்காதவை.

அதுபோலவே 'புதுப்புது அர்த்தங்கள்'  படத்தில்  வயதான தம்பதிகளாக வரும்
பூர்ணம் விஸ்வநாதன், சௌகார் ஜானகி ஜோடி. பின்பு  பூர்ணம் விஸ்வநாதன் இறந்த பின் வரும் சோக காட்சிகள். அவை கண்ணீரை தழும்ப செய்யக் கூடியவை. இப்படி எத்தனையோ பல.

சமீபத்தில் கூட அவருடைய  'வறுமையின் நிறம் சிகப்பு', 'அவள் ஒரு தொடர்கதை', 'தண்ணீர் தண்ணீர்' போன்ற படங்‌களை தேடி பிடித்து மீண்டும் கொண்டிருந்தேன். 'பார்த்தாலே பரவசம்'  நான் பார்த்த அவருடைய மிக சமீபத்திய படம்.

கதை, வசனம், பாத்திர வடிவமைப்பு என எல்லாவரிலும் தனது தனித்தன்மையை பதித்து விடுவார்.

அவருடைய படத்‌தில் பாடல்களுக்கும் எப்போதும் ஒரு தனி இடமுண்டு.
திரைக்கதைக்கு வலுசேர்க்கும் வகையில் பாடல் பெறும் வித்தையை அறிந்தவர்.

தமிழ்த் திரையுலகின் முக்கிய நடிகர்களான கமல்ஹாசன் மற்றும் ரஜினி காந்தை அறிமுகம் செய்தவர். தொலைக்காட்சித் தொடர்களில் முதலில் நுழைந்ததது. என பல 'முதல்'களுக்கு சொந்தக்காரர் அவர்.

தன்னுடைய கடைசி காலம் வரை தமிழ் திரை உலகுக்கு தன் வாழ்வை அர்ப்பணிப்பு செய்தவர் எனறால் மிகையில்லை.

உஙகள் மகன் அல்லது மகளுக்கு இன்னும் கால்நூற்றாண்டு தாண்டியும் நீங்கள் துணிவாக இவர் படங்களை பரிந்துரைக்கலாம்.

என்னுடைய தஞ்சை தந்த தங்கம் பாலச்சந்தர் என்பதில் எனக்கு கர்வமே.

தலைமுறைகள் தாண்டி அவருடைய படைப்புகள் தமிழ் திரையுலகின் ஓரு அடையாளமாய் வாழும்.

Saturday, December 20, 2014

இப்பவே கண்ணைக் கட்டுதே!

சென்னையில்வுள்ள நண்பர்  ஓருவரிடம் சில வாரங்களுக்கு முன் பேசிக் கொண்டிருந்தேன். நண்பர் என்றால் என்னைவிட  ஜூனியர் , இருப்பத்தேழு இருக்கலாம்.  சில வருடங்களாகத்தான் பழக்கம் ஆனால் வெளிப்படையாக பேசும் டைப்.  இன்னும் திருமணம் ஆகவில்லை.

ஐ.டி. துறையில் இருந்த நல்ல வேலையைவிட்டு  தற்போது இசைத்துறையில் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.  கொஞ்சம் வசதியானவர். அப்பா மென்பொருள் துறையில் பெரிய பதவியில் இருந்தவர்.  தற்போது கார்ப்பரேட் ட்ரைனிங் சென்டர் நடத்துகிறார்.

இவர் படித்ததோ இன்ஜினியரிங், சிறு வயதில் பெரிய இசையும் பயிற்சியும் இல்லை. ஆர்வத்தில் கடந்த ஒரு வருடத்தில் பியானோ வில் ஏதோ ஏழு எட்டு லெவல் படித்து விட்டாராம். இப்போது கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் இசையமைப்பாளரின் இசைக் கல்லூரியில் வேறு ஏதோ படித்துக் கொண்டிருக்கிறார்.  ஒரு திரைபட இசையமைப்பாளரின் உதவியாளராக
சேர்ந்து பின்பு படிப்படியாக இசையமைப்பாளராவது அவர் கனவு. மேற்க்கத்திய இசையில் ஆர்வம் என சொல்லக் கேட்டிருக்கிறேன்.

தமிழ்நாட்டில் தமிழிசை எந்த திசையில் இருக்கிறது என நீங்கள் கேட்பது என் காதில்விழுகிறது. :)

சில மாதங்களுக்கு முன் நண்பர்களுடன் சேர்ந்து ஏதோ ஆல்பம், படப்பிடிப்பு என இருந்த வேலையும் விட்டுவிட்டு கைக்காசை செலவு செய்து சுத்‌திக் கொண்டிருந்தார். எனக்கு தெரிந்த திரைப்படப் பாடலாசிரியர்களை ஆல்பத்தில் பயன்படுத்துவது  பற்றிக் கூடப் பேசிக்கொண்டிருந்தார்.

அதன் பின்பு சமீபத்தில் தான் பேசினேன்.  ப்ரைவேட் ஆல்பம் நண்பர்கள் கொடுத்த ஐடியாவாம். அந்த பதினைந்து நிமிட ஆல்பத்துக்கு கடந்த மூன்று மாதங்களாக இரவு பகலாக மெனக்கெட்டுருக்கிறார். மெட்டு அமைப்பது, சரியான பாடல் வரிகளை தேர்வு செய்வது அதற்க்கு ஏற்ற இசைக் கோர்வைகள் உருவாக்குவது மேலும் பொருத்தமான வாத்‌தியக் கருவிகளை பயன்படுத்துவது, நல்ல தரமான ஒலிப்பதிவு என வேலை பின்னி எடுத்துத்திருக்கிறது. பாவம் நோகாமல் ஏசி யில் ஐ.டி வேலை  செய்து சம்பளம் வாங்கியவருக்கு  இதெல்லாம் புதிதுதான்.

அது மட்டுமின்றி ரெக்கார்டிங் ஸ்டூடியோ, பாடக, பாடகியர் காஸ்டியூம், வீடீயோ என பணமும்  சில லட்சங்‌கள் வரை காலி.

மேலும் தொழில் நுட்பங்களை புரிந்து கொண்டு தனியாக இயங்க பல  ஆண்டு கடும்உழைப்பு தேவை  என்பதை இந்த ஒரு ஆல்பத்தின் வழியாகவே அனுபவப்பூர்வமாக உணர்ந்துள்ளார். அப்படி நல்ல திறமை உள்ள சிலரும் திரையில் ஜொலிக்க இயலவில்லை என்பதை கண்கூடாக பார்க்கிறார். இசை பிரியம் என்பது வேறு அதையே ஜீவனமாக்கி கொள்வது எவ்வளவு கடினம் என்பதை புரிந்து கொண்டுள்ளார்.

அடுத்தது என்ன? என்றால்,' ஏதோ தெரிந்தோ தெரியாமலோ இதில் குதித்தாகிவிட்டது, இன்னும் ஓரிரு ஆண்டுகள் முயற்சித்து பார்க்கவுள்ளதாக' சொன்னார்.

நினைத்திருத்தால் இவர் வேலையை விடாமல் எப்போதோ திருமணம்,குழந்தை என  செட்டில் ஆகி இருக்கலாம். ஆனால் இவர் வாழ்க்கையில் எதிர் நீச்சல் போட துணிந்து விட்டார். இப்போது சேர வேண்டிய இலக்கு   கண்ணுக்கு தட்டுப்படவில்லை. ஆனால் கை கால்கள் இப்போதே சோர்வடையத் துவங்கி விட்டது.

இவரைப் போல  படைப்பாளியாக  முயற்சித்து தோற்று அல்லது முழுமையாக  முயற்சிக்காமல் பாதியில் விட்டவர்கள் பலர்.

அவர்கள் எங்கோ மேடைக் கச்சேரிகளில் வெற்‌றி பெற்றவர்களின் பாடல்களை பாடிக் கொண்டோ அல்லது இசை அமைத்துக்  கொண்டோ இசையோடு தங்கள் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களுக்கு நீஙகள் தரும் மிகப்பெரிய வெகுமதி கைத்தட்டலும், பாராட்டுமன்றி வேறில்லை..

Saturday, December 13, 2014

ரஜினியின் லிங்கா படம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் புதிய படம் 'லிங்கா' உலகம் முழுவதும்  வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இங்கே நான் கண்ணை மூடிக் கொண்டு "வெற்றிகரமாக" என்ற வார்‌த்தையை சேர்க்க எந்த பிரயத்தனமும் செய்ய தேவையில்லை. உலகத்தமிழர்கள் மேல் அவ்வளவு நம்பிக்கை.

ஆனால், இந்தமுறை முன்பு எப்பொழுதும் போலில்லாமல் ரஜினி பற்றியும் அவர் அரசியல் நிலைப்பாடு ,சாதனை, வயது பற்றியும் நிறைய வெளிப்படையான விமர்ச்சனங்கள்  சமூக வலைதளங்களில் முன் வைக்கப்பட்டன.

முதல் காட்சிக்கு சென்று ரசிக்கும் ரசிகனாக இல்லாவிடிலும், கடந்த 30 வருடமாக நானும் ரஜினி ரசிகன்தான். பதின்ம வயதுகளில் பார்த்த  எஜமான் படத்தில் ரஜினியின் அறிமுக காட்சிகளில் உற்சாகம்  உடலின் ஒவ்வொரு செல்லிலும் பொங்கியது இன்றும் நன்றாக நினைவில் உள்ளது.  இதை சொல்லிக் கொள்வதில் எந்த விதத்திலும் நான் வெட்கப்படவில்லை. சிறுவர் முதல் பெரியவர் வரை ரசிக்கும் நாயகன் அவர்.  ஏறக்குறைய கடந்த 40 ஆண்டுகளாக நம்மில் ஒருவராய் உலா வருகிறார்.

சந்திரமுகி படத்தில் அவர் வடிவேலுவுடன் செய்யும்  சில நகைசுவைகள்கூட
எனக்கு உடன்பாடு இல்லை தான்.  அதற்காக அவரை முற்றிலும் என்னால் புறக்கணிக்க இயலவில்லை. முன்பு வடிவேலு இப்போது சந்தானம் என ஜெயிக்கும் குதிரையுடன் பயணிக்கிறார்.  காதாநாயகிகள், லொகேஷன் என
மாறினாலும் அவர் படங்கள் பழைய பார்முலாதான். எனவே சினிமா ஓரு வியாபாரம் என்ற நிலையுடன் நிறுத்திக்கொள்வது உத்தமம். அதுபோல அரசியல்  நிலைப்பாடாகட்டும்  அல்லது விளம்பரமாகட்டும் ரஜினி அவருடைய பாதையில் பயணிப்பதாகவே தோன்றுகிறது.

நாம்தான் தேவையில்லாமல் சினிமாவையும் அரசியலையும் ஒன்றாக சேர்த்து குழப்பிக் கொள்கிறோம். திரையில் அவர் செய்யும் சாகசங்களை நிஜ வாழ்விலும் எதிர்பார்க்கிறோம். நம் இயலாமையில் இருந்து மீட்க ஓரு  ரட்சகரை நோக்கி காத்‌துக்கிடக்கிறோம்.  அது அறிவீனமின்றி வேறென்ன ?.

அவர் மேல் வீசப்படும் மற்றோரு குற்றச்சாட்டு அவரின் பொதுநல தொண்டு பற்றியது. நிஜ வாழ்வில் அணை கட்டுவார், மருத்துவமனை காட்டுவார் என எதிர்பார்க்காமல். அரசுக்கு சரியான வரி கட்டினால் சந்தோசப்படுங்கள். அவர் வழி எப்போதும் தனி வழி என விடுங்களேன். அவர் "மாஸ் எண்ட்டெர்டெயினர்" அதுவன்றி வேறென்ன தேவை?

நாட்டைத் திருத்த 'லிங்கா' க்கள் வர வேண்டியதில்லை. நம்மை
நாமே திருந்திக் கொள்வதுதான் வழி என்ற நிதர்சனத்தை உணர்ந்தால் விசனப்பட வேண்டியதில்லை.

Wednesday, December 3, 2014

அணிலாடும் முன்றில் - பாட்டி

சமிபத்தில் பாடலாசிர் நா.முத்துக்குமார் எழுதிய 'அணிலாடும் முன்றில்' புத்தகம் படித்து முடித்தேன் (முன்றில் என்றால் முற்றம்). இது கவிதை புத்தகமோ அல்லது பூதமோ என நீஙகள் பயப்படத்தேவை இல்லை.  இது அவர் ஆனந்த விகடனில் தொடராக எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு.

கூட்டு குடும்பங்கள் சிதைந்து வரும் அல்லது சிதைந்து விட்ட தமிழ் சூழலில்
அம்மா,அப்பா,மனைவி தாண்டி அண்ணன், தம்பி, அக்கா, தங்கை எனும் பல உறவுகளை நினைத்து நேசித்து  எழுதியுள்ள அருமையான நூல். இந்த புத்தகத்தை வாசிக்கும் போது ஏதோ ஒரு புள்ளியில் உங்கள் வாழ்க்கையை பொருத்தி பார்க்க தவறமாட்டீர்கள்.

நாம் எளிதாய் கடந்துபோகும் மற்ற கற்பனை கதைகளை விடவும் இந்த அசலான மனிதர்களை வாசிக்கையில் மனது நம் பால்ய நினைவுகளுக்கு சென்று திரும்புகின்றன. அந்த சுகானுபாவமே நம்மை மேலும் பல தூரம் பறத்தலுக்கான சக்தியையும் உத்வேகத்தையும் தரவல்லது. வாய்ப்பிருந்தால் வாசித்துப் பாருங்கள்.

எனது  'அணிலாடும் முன்றில்' இதோ உங்களுக்காக.

மிக அதிகாலையில் வரும் தொலைபேசி  ஏனோ தேவையில்லாமல் ஒரு அவசரத்தை தாங்கிய தந்தியை நினைவுபடுத்துகிறது. அப்படிப்பட்ட ஒரு நிகழ்வைத் தாங்கிதாக இருந்தது அந்த அதிகாலை அழைப்பு.  அது என் பாட்டி காலமான செய்தி. வாழ்வில் ஒவ்வோரு உறவுகளும் ஏதோ ஒரு அனுபவத்தை, நினைவுகளை பாடங்களை நம்மில் விட்டுச்செல்ல தவறுவதில்லை.

கொஞ்சம் ப்லாஷ்பேக். பாட்டி பிரிட்டிஷ் காலத்தில் SSLC படித்தவர். அந்த காலத்தில் வந்த போஸ்ட் ஆபீஸ் வேலையை ஏற்றுக் கொள்ள வில்லை என பல சமயங்களில் சொல்ல கேட்டிருக்கிறேன்.

எனக்கு ஒன்பதாம்  வகுப்பில் இருந்து பள்ளிஇறுதி வரை தினமும்  பாட்டி வீட்டுக்குத்தான் முதல்  விஸிட் பிறகே மற்றவை. நகரத்தின் மையத்தில் இருந்த ஓட்டு வீடு. அது எப்போதும் எங்களுக்கு பாட்டி வீடே தவிர வேறில்லை. அந்த அளவுக்கு நெருக்கம்.

என் பாட்டனார் அரசு வக்கீலாக வேலை நிமித்தமாக பல ஊர்களை சுற்றி
கடைசில் சொந்த ஊரான திருவாரூரில் வந்து செட்டில் ஆனபோது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்ததாக ஞாபகம்.

வீட்டை பார்க்கச் சென்ற நாள் ஒரு குடியரசு தினமோ அல்லது சுதந்திர தினமாகவோ இருக்ககூடும்.  என் வீட்டில் இருந்து போகும்போது சாலையோரம் தேசிய கொடி ஏற்‌றி இனிப்பு வழங்‌கி கொண்டிருந்தனர். அப்போது குத்‌திய தேசிய கொடி போல நெஞ்சில் இன்னும் பாட்டி வீட்டு நினைவுகள்.

எனது கிராம வாழ்க்கைக்கும் நகரத்துக்‌குமான இடைவெளியை முதலில் இட்டு நிரப்பியது அந்த வீடு. அது ரேடியோவுக்கும், டிவிக்கும்; சைக்கிளுக்கும்,TVS Champக்கும்;  அம்மிக்கும், மிக்‌ஸிக்குமான இடைவெளியாக இருக்கலாம்.

வங்கி, போஸ்ட்ஆபீஸ், தையல் கடை, காய்கறி மார்க்கெட் என வெளி விசயங்களை அங்குதான் பழகிக் கொண்டேன். ஆசிரியர் வீடுகள், பிரபலமான வக்கீல் வீடுகள், விளிம்பு நிலை மனிதர்கள் என சமூகத்தின் அனைத்து தளத்திலும் அறிமுகம் கிடைத்ததும் அங்கு தான். சாமி, நாள், நட்சத்திரம்,விரதம் என சகலமும் பரிச்சமானது கூட அங்கேதான். அதே நேரத்தில் படிப்பிற்கான முக்கியத்துவத்தை திரும்ப சொல்லி சொல்லி மனத்தில் ஆழப் படிய வைத்தவர்.

பாட்டி,தாத்தா என இருவருமே அங்கு ஒரு ஒழுங்கை கடைபிடித்து வந்தனர்.  எந்த ஒரு குளிரோ,மழையோ புயலோ இருந்ததாலும் அதிகாலை நாலரை மணிக்கே வீடு விழித்துக் கொள்ளும்.  பாட்டி  அதிகாலையில் எழுந்தவுடன் சாமி அறை பெருக்கி சுத்தம் செய்து குளித்து சாமி விக்கிரகங்களுக்கு அபிஷேகம் , பூஜை  முடித்து பின்பு சாமி பாடல்களை உனுறுகிப் பாடுவார். சமைப்பதிலும் சமர்த்தர் அவர். பண்டங்கள், சாப்பாடு என அவரது கை பக்குவம் மிகஅலாதி.  ஒரு ஒப்பீட்டுக்கு கூட யாரையும் துணைக்கழைக்க இயலாத சுவை அது.

கற்றதில் சில:  அசராத உழைப்பு, சிக்கனம், பண மேலாண்மை, பொருட்களின் தரத்தில் சமரசம் செய்யாமை எல்லாவற்றை விட உறவுகளுக்கு கொடுத்து  உதவும் மனம்.

தொட்டால் பூ மலருமா தெரியாது, ஆனால் அவர் பீரோவை தொட்டால் நிச்சயம் நோட்டு வரும். கேட்காமலே எங்கேயோ சேர்த்து வைத்த பணத்தை தேவைக்கு எடுத்து பாரபட்சமின்றி தந்து உதவும் உத்தம உள்ளம் கொண்டவர்.

அவரிடம் ஒரு தெய்விகத் தன்மையைத் தரிசிக்க முடிந்தது. அவர் அன்பு பாசாங்கற்றது. மற்ற கதை சொல்லும் பாட்டிகளை போலின்றி அவர் மிகச் சிறந்த ஆளுமையாகவே எனக்குள் பரிமளிக்கிறார். அது மூன்று தலைமுறைகளுக்கு  அறிவுரையும்,ஆலோசனையும் தந்து வழிநடத்திய ஆளுமை.

பல வருடங்களுக்கு முன்பு  அவசர தேவையாக எனது பல் அறுவை சிகிச்சைக்கு சில ஆயிரங்களை ஐம்பது, நூறு ரூபாய் நோட்டுகளாக  தந்தார். மருத்துவமனை செல்லும் வழி முழுக்க அவர் பணத்தை சுருட்டி தந்த மஞ்சள் பை கனத்துக் கொண்டேயிருந்தது

அங்கே நீ
இறுதியாய்
இருளில் புதைந்து கொள்ள
இங்கே நான்
புதைந்து அழ
இருள் தேடினேன்!
..

இந்த தலைமுறையிலும் என் போன்ற பல பாக்கியசாலி பேரன்களும்,பேத்திகளும் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையில்..